லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; நிலுவை வழக்குகளால் சிக்கல்
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; நிலுவை வழக்குகளால் சிக்கல்
ADDED : ஜூலை 12, 2026 10:03 AM

கோவை: தமிழக அரசு லஞ்ச ஒழிப்புக்கு எதிரான தீவிரமாக செயல்படுகிறது. பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு இறுதியாக தண்டனை பெற்றுத்தரும் நீதிமன்ற நடைமுறை ஆண்டுக்கணக்கில் இழுப்பதால், அதன் நோக்கம் நிறைவேறுவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், 2024-25ல் 199 டிராப் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம், 681 வழக்குகள் பதிவாகியுள்ளன. நடப்பாண்டில், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேலும், தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய வழக்குகள் பதிவு செய்யும் வேகத்திற்கு இணையாக, பழைய வழக்குகள் நீதிமன்றங்களில் முடியாததால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024-25 புள்ளிவிபரங்களின் படி, தமிழகம் முழுவதும் பத்தாண்டுகளில் 1,385 லஞ்ச வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் 3,380 பேர் விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.
குற்றவியல் வழக்குகள் மட்டுமின்றி, 624 தீர்ப்பாய விசாரணைகளும் நிலுவையில் உள்ளன. இதில் 1,527 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர். மேலும், 724 துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளில் 5,430 அரசு அதிகாரிகள் தொடர்புடையவர்களாக உள்ளனர். இதுவும் துறை ரீதியான நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவடையாமல் நீடித்து வருகிறது.
தமிழகத்தில் லஞ்ச செயல்பாடுகளை வேரோடு அழிக்க நினைக்கும் முதல்வர், நீதிமன்ற செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளை களையவேண்டியது அவசியம். பல வழக்குகள் பத்து ஆண்டுகள் கடந்தும் முடியாத நிலையில் புதிய வழக்குகள் பதிவு செய்யும் போது, வழக்குகள் தேக்கமடையும் சிக்கல் உள்ளது என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'லஞ்ச புகாரின் கீழ், ஆவணங்களை சேகரிப்பதில், குறிப்பாக, அரசு அலுவலர்கள், அதிகாரிகள் மீது அந்தந்த துறைகளில் ஆவணம் ஒருங்கிணைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. சாட்சிகள் அடிக்கடி ஆஜராகாதது, அதிகாரிகள் இடமாற்றம், சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் விசாரணை நீண்டு செல்கின்றன,' என்றார்.
கோவை மாவட்ட வழக்கறிஞர் முகமதுசமீர் கூறுகையில், ''நீதிமன்றங்களில் நான்கு பேர் செய்யும் வேலை ஒருவர் செய்யும் சூழல் உள்ளன. தேவையான பணியிடங்களை உருவாக்கவேண்டியதுஅவசியம். தவிர, அரசுத்துறை சார்ந்த வழக்குகளில் வேண்டுமென்ேற தாமதப் படுத்துவதும், ஆஜராகாமல் தவிர்ப்பதும் நடக்கிறது.
''வழக்குகளின் தன்மையை பொறுத்து கால அவகாசம் நிர்ணயித்து அதை முறையாக பின்பற்றவேண்டியது அவசியம். அவகாசம் கடந்தால் காரணத்தையும் பதிவு செய்யும் நடைமுறை அவசியம்,'' என்றார்.
