தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/குற்றம் புரியும் போலீசுக்கு தண்டனைகள் கடுமையாகுமா?

குற்றம் புரியும் போலீசுக்கு தண்டனைகள் கடுமையாகுமா?

குற்றம் புரியும் போலீசுக்கு தண்டனைகள் கடுமையாகுமா?


ADDED : ஜன 28, 2025 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமீப காலங்களில் குற்ற வழக்குகளில் சிக்கி, தமிழக காவல் துறை அதிகாரிகள் கைதாகி வரும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

குடும்ப பிரச்னை புகாரில் மனைவியிடம் ஒப்படைக்கும்படி, கணவர் கொடுத்த 100 சவரன் தங்க நகைகளை அபகரித்ததாக, பெண் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதில், மதுரை திருமங்கலம் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், சர்வதேச கடத்தல் கும்பல் ஆதரவுடன், மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த, சென்னை அசோக்நகர் காவல் நிலைய கான்ஸ்டபிள் ஜேம்ஸ், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய முதல் நிலை காவலர்கள் ஆனந்தன், சமீர் மற்றும் அருண் பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, வருமான வரி அதிகாரிகளுடன் கூட்டணி அமைத்து, வழிப்பறியில் ஈடுபட்ட ராஜா சிங் மற்றும் சன்னி லாய்டு ஆகிய சிறப்பு எஸ்.ஐ.,க்களும் கைது செய்யப்பட்டனர்.

பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், எதிரிகளுக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை தாக்கிய புகாரில், சென்னை அண்ணா நகர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜி, சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, அண்ணா பல்கலை மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் மொபைல் போன் எண்களை ஆய்வு செய்தபோது, அடையாறு காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள், ஞானசேகரனிடம் பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள், ஓசி பிரியாணி கேட்டு, அவரிடம் பேசியதாக செய்திகள் சொல்கின்றன.

புதுக்கோட்டை மாவட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடும் மாபியாவால், மினி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பிரச்னை நடந்து ஒரு வார காலத்துக்கு பின், சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு இருக்கிறார்.

இப்படி, சட்டம் - ஒழுங்கையும், சமூக ஒழுங்கையும் காப்பாற்றுவதில் வேலியாக இருக்க வேண்டிய போலீசாரே, தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, காவல் துறையின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது.

இந்த மாதிரி எல்லா நிகழ்வுகளையும் கண்டறிந்து, உடனுக்குடன் மாநில தலைமைக்கு தகவல் தர வேண்டிய பொறுப்புடைய உளவுத் துறை, உரிய தகவல்களை அனுப்பிய பின்னரும், காவல் துறையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன்?

அண்ணா பல்கலையில் நடந்த சம்பவத்தை அடுத்து, இதுபோன்று இனிமேலும் நடக்கக் கூடாது என்பதற்காக, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வழி செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல, காவல் துறையில் இருந்து கொண்டு தொடர் குற்றங்களில் ஈடுபடுவோருக்கும், கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தையும் தமிழக அரசு இயற்ற வேண்டும். அப்போது தான், காவல் துறையினரின் தவறுகள் குறையும் என, அரசு தரப்புக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் குவிந்துள்ளன. இதையடுத்து, இவ்விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனக் கேட்டு, தமிழக அரசு தரப்பில் சட்டத் துறையிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us