தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும்; நயினார் நாகேந்திரன்
UPDATED : ஜன 01, 2026 04:44 PM
ADDED : ஜன 01, 2026 04:24 PM

சென்னை: தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 'சமத்துவம் பொங்கட்டும்' என சமூக வலைதளத்தில் பேசிவிட்டு, சமூகநீதியை வீசியெறிந்து, சர்வாதிகாரப்போக்கில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார். புத்தாண்டை வாணவேடிக்கையுடன் உலகமே கொண்டாடிய வேளையில், அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி இருளில் அடைத்து வைத்ததோடு, நள்ளிரவில் திக்குத் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு கொடுமைப்படுத்தி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பணிநிரந்தரம் செய்வோம் என்று கூறிய உங்கள் தேர்தல் வாக்குறுதி எண் 285 தான் மறந்துவிட்டது என்றால், தூய்மைப் பணியாளர்கள் மனிதர்கள் என்பது கூடவா உங்கள் திராவிட மாடல் அரசிற்கு மறந்துவிட்டது? புத்தாண்டில் திக்குத் தெரியாமல் தூய்மைப் பணியாளர்களைத் தவிக்கவிட்ட பாவமே, திமுக அரசை திக்குத் தெரியாமல் துரத்தியடிக்கும். தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரே திமுக அரசை அழிக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

