பா.ம.க., குழப்பத்துக்கு காரணம் பா.ஜ.,: செல்வப்பெருந்தகை
பா.ம.க., குழப்பத்துக்கு காரணம் பா.ஜ.,: செல்வப்பெருந்தகை
ADDED : ஜூன் 28, 2025 02:12 AM

சென்னை : ''பா.ம.க., குழப்பத்துக்கு பா.ஜ.,வே காரணம்,'' என, தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்த பின் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
ராமதாஸ் - அன்புமணி இடையே கடுமையான மோதல்போக்கு நிலவுகிறது. பா.ம.க.,வில் நீடிக்கும் குழப்பங்களுக்கு தி.மு.க.,வே காரணம் என அன்புமணி குற்றஞ்சாட்டிய நிலையில், 'அது பச்சை பொய்' என ராமதாஸ் மறுத்தார்.
ஆனால், அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணியில் பா.ம.க.,வும் சேர்ந்தால், அந்த அணி வலுவடைந்து விடும் என்பதை தடுக்கவே, தி.மு.க., குழப்பத்தை ஏற்படுத்துவதாக அன்புமணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியை, கடந்த 20ல் ராமதாஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, தி.மு.க., கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையும், மருத்துவமனைக்கு வந்து மணியை சந்தித்ததோடு, ராமதாசிடமும் சிறிது நேரம் உரையாடினார்.
இந்நிலையில், நேற்று திடீரென திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்துக்கு செல்வப்பெருந்தகை சென்று, ராமதாசை சந்தித்தார். அரைமணி நேரம் நீடித்த சந்திப்புக்கு பின், செல்வப்பெருந்தகை கூறியதாவது:
மரியாதை நிமித்தமாக பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். அரசியல் குறித்தோ, கூட்டணி குறித்தோ பேசவில்லை. ராமதாஸ், அன்புமணி இடையிலான பிரச்னையில் சமாதான பேச்சு எதுவும் நடத்தவில்லை. அவர்கள் இருவரும் சமாதானமானால் மகிழ்ச்சி.
பா.ம.க.,வில் நடக்கும் குழப்பங்களுக்கு, தி.மு.க., காரணமல்ல. அன்புமணி, புரிதல் இன்றி இப்படி கூறுகிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு சூழ்ச்சி அரசியல் தெரியாது.
சொல்லப்போனால் ராமதாஸ், அன்புமணி மோதலுக்கு, பா.ஜ., தான் காரணம். கூட்டணி கட்சிகளை உடைப்பது பா.ஜ.,வின் வழக்கம். தமிழகத்துக்கு எது நல்லதோ, அதை ராமதாஸ் செய்வார். தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சேருமா என்பதை, ஸ்டாலின் தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.