உட்கட்சி தேர்தல் பணிகளில் உள்ளடி: பா.ஜ.,வில் சமரச கூட்டம் ரத்து
உட்கட்சி தேர்தல் பணிகளில் உள்ளடி: பா.ஜ.,வில் சமரச கூட்டம் ரத்து
ADDED : ஜன 03, 2025 01:20 AM

தமிழக பா.ஜ., உட்கட்சி தேர்தலில், மண்டல் தலைவர்கள் தேர்வில் உள்ளடி வேலை நடப்பதால், மாவட்ட தலைவர் தேர்தல் நடத்த முடியாமல் இழுபறி நீடிக்கிறது. கட்சி நிர்வாகிகளிடம் பஞ்சாயத்து நடத்த, இன்று நடக்கவிருந்த மையக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோஷ்டி பூசல்
தமிழகம் முழுதும், பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முடிந்து, உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் பூத் கமிட்டி தேர்தல் முடிந்து விட்டதால், அடுத்ததாக மண்டல் தேர்தல் நடத்த வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து, மண்டல் தலைவர்களை தேர்ந்தெடுப்பர். மாவட்ட தலைவர்களை, மண்டல் தலைவர்கள் தேர்ந்தெடுப்பர்.
இறுதியாக மாநில தலைவர்கள், தேசிய தலைவர் தேர்தலை இந்த மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிலை உள்ளது.
மண்டல் தலைவர்கள் தேர்வில் இழுபறி நீடிக்க, மாவட்ட வாரியாக காணப்படும் கோஷ்டி பூசல் தான் பிரதான காரணமாக உள்ளது. அப்பதவிக்கு போட்டி உள்ள மாவட்டங்களில் பஞ்சாயத்து நடத்தி, மண்டல் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் தேர்தலை, பொங்கல் பண்டிகைக்கு முன் முடித்தாக வேண்டும் என, டில்லி மேலிடம் தமிழக பா.ஜ., தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
சென்னையில், 7 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இதில் தென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில், மூன்றாவது முறையாக காளிதாஸ் இருக்கிறார். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தனசேகரன், கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் நீண்ட ஆண்டுகளாக பதவியில் நீடிப்பதால், 5 மாவட்ட தலைவர்களை மாற்றும் வாய்ப்பு உள்ளது.
அதனால், அவர்கள் தங்கள் பதவிகளை தக்க வைக்க, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, மண்டல் தலைவர் பதவி பெற உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்த முடியாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
மண்டல், மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிந்ததும், மாநில தலைவர் தேர்தல் நடக்கவுள்ளது. மாவட்ட தலைவர் பதவியை, 40 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு வழங்க அண்ணாமலை விரும்புகிறார்.
கடும் போட்டி
மண்டல் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, அதிகபட்சமாக 45 வயது என்ற நிலையில், அண்ணாநகர் மேற்கு மண்டல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கடேசனுக்கு, 49 வயது என புகார் எழுந்துள்ளது. இதே போல பல இடங்களிலும் குழப்பம் உள்ளது.
தமிழக பா.ஜ., நிர்வாகத்தில், பொதுச்செயலர் பதவி மற்றும் கோட்ட பொறுப்பாளர் பதவிகள் முக்கியம் என்பதால், அவைகளை கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்த போட்டியை தவிர்க்க, கட்சி நிர்வாகிகள் மத்தியில் பஞ்சாயத்து நடத்தி, பொங்கலுக்கு முன் தேர்தல் நடத்தி முடிப்பது குறித்து ஆலோசிக்க, மையக் குழு இன்று கூடுவதாக இருந்தது. அது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
- நமது நிருபர் -.