ADDED : மார் 11, 2024 03:57 AM

பெங்களூரு: 'ராமேஸ்வரம் கபே' உணவக குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியை, ஹைதராபாதில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு புருக்பீல்டு பகுதியில் உள்ள, 'ராமேஸ்வரம் கபே' உணவகத்தில் கடந்த 1ம் தேதி குண்டு வெடித்தது. நான்கு பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.
குண்டு வெடிப்பு நிகழ்த்தியதாக, சந்தேகப்படும் நபரின் புகைப்படங்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். 'அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சம்பவம் நடந்து 11 நாள் ஆகியும், குண்டு வைத்தவர் இன்னும் சிக்கவில்லை. அந்த நபர் பெங்களூரில் இருந்து பல்லாரிக்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்ததால், பல்லாரியில் தேடுதல் வேட்டை நடந்தது. அங்கும் அவர் சிக்கவில்லை.
இந்நிலையில் அந்த நபர், கலபுரகி வழியாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதிற்கு தப்பிச் சென்றதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை கலபுரகி சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள், கலபுரகி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
டிரைவர்கள், கண்டக்டர்களிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஹைதராபாதில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்துகின்றனர்.

