பெரிய பதவியில் இருப்போரை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்: மகன் கொலைக்கு நீதி கேட்கும் தாய்!
பெரிய பதவியில் இருப்போரை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்: மகன் கொலைக்கு நீதி கேட்கும் தாய்!
UPDATED : பிப் 06, 2026 06:44 AM
ADDED : பிப் 06, 2026 06:42 AM

சென்னை: ''நகை திருடு போனதாக பொய் புகார் அளித்த நிகிதா மீதும், என் மகனை அடித்தே கொலை செய்ய உத்தரவிட்ட பெரிய பதவியில் இருப்போர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கோவில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் காவலாளியான, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 29, நகை திருடியதாக, தனிப்படை போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார். இக்கொடூர கொலை தொடர்பாக, தனிப்படை போலீசார் கண்ணன், ராஜா, ஆனந்த் பிரபு, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இக்கொலை குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்கள், அஜித்குமார் கொலை குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், 'அஜித்குமார் நகையை திருடியதாக நிகிதா என்பவர் பொய் புகார் அளித்து இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது' என்று, கூறியுள்ளனர். இந்நிலையில், மடப்புரத்தில் அஜித்குமாரின் தாய் மாலதி நேற்று கூறியதாவது: ஒரு தாயின் வலி மற்றொரு தாய்க்கு தான் தெரியும் என்பது போல, என் மகனை கொன்ற போலீசார் ஐந்து பேரையும் ஜாமினில் வெளியே விட முடியாது என, நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்து இருப்பது, பெற்ற வயிறுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
என் மகன் மீது திருட்டு பழி சுமத்தி, அவனை ஒரு பயங்கரவாதி போல தலைகீழாக தொங்க விட்டு, அவன் மீது மிளகாய் பொடி துாவி, உயிர் நாடியில் எட்டி உதைத்து சொல்ல முடியாத அளவுக்கு சித்ரவதை செய்து கொடூரமாக கொன்று விட்டனர். என் மகனை விசாரிக்க வேண்டும் என, அழைத்துச் சென்ற போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டேன். என் மகன் நகையை திருடி இருக்க மாட்டான். அவனை விட்டு விடுங்கள் என, கதறியும் பார்த்தேன். கடைசியில் உயிரற்ற பிணமாகவே அவனை பார்த்தேன்.
பொய் புகார் அளித்த நிகிதாவையும், அவருக்கு சாதகமாக சிபாரிசு செய்து, டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படையை ஏவி, என் மகனை கொன்ற பெரிய பதவியில் இருக்கும் நபர்களையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.அவரது வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறுகையில், ''அஜித்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோரின் மொபைல் போன்களை, போலீசார் மறைத்து வைத்து உள்ளனர்.
அவை எங்கு உள்ளன என்பது மர்மாகவே உள்ளது. அஜித்குமார் நண்பர்கள் என்பதாலேயே அருண், பிரவீன், வினோத் ஆகியோரை போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பது அறிவிப்பாகவே உள்ளது. முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனை, அவரின் உறவினர்கள் வாயிலாக, சமாதானம் செய்ய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்,'' என்றார்.

