தேர்தல் முடியும் வரை வெளிநாடு செல்ல தி.மு.க.,வினருக்கு முதல்வர் தடை
தேர்தல் முடியும் வரை வெளிநாடு செல்ல தி.மு.க.,வினருக்கு முதல்வர் தடை
ADDED : அக் 23, 2025 02:31 AM

சட்டசபை தேர்தல் முடியும் வரை, வெளிநாடு களுக்கு செல்ல வேண்டாம்' என, தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க.,வை தயார்படுத்தும் வகையில், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சி வாயிலாக, தொகுதி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை வழங்கி வருகிறார். இதுவரை 150க்கும் மேற்பட்ட தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்கள், மற்றும் கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க., அரசு, ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை தீட்டி, நிறைவேற்றி இருக்கிறது. அந்த சாதனைகளை, மா.செ.,க்களும் எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி பொறுப்பாளர்களும் மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்கவில்லை.
கேட்பதே இல்லை இதனால், தி.மு.க., மீதான ஈர்ப்பு, மக்களிடம் குறைந்து விட்டதாக, கருத்துக்கணிப்புகள் வாயிலாக தி.மு.க., தலைமை கண்டறிந்துள்ளது.
அதேபோல, கட்சித் தொண்டர்களை, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அரவணைத்து செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுதும் உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ஆதரவு எப்படி உள்ளது; மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க் கள், மாவட்டச் செயலர்கள் கேட்பதே இல்லை.
இதையெல்லாம் விரைந்து சரி செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அதனால், அமைச்சர்கள், மா.செ.,க் கள், கட்சி நிர்வாகிகள் யாரும் தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என, உத்தரவிட்டுள்ளார்.
துறை சார்ந்து வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் அமைச்சர்கள் வேண்டுமானால், கட்சி தலைமையின் அனுமதி பெற்று செல்லலாம்.
ஆனால், மற்ற அனைவரும், தொகுதி மக்களை சந்திக்க வேண்டும்; அவர்கள் குறைகளை கேட்டு களைய வேண்டும்; அரசின் திட்டப் பலன்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்; கட்சிக்குள் மாவட்டம் தோறும் இருக்கும் கோஷ்டி பூசல்களை உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எதிர்பார்த்த வெற்றி கட்சியின் கோஷ்டி பூசல் விவகாரத்தில், பொறுப்பு அமைச்சர்களால் தீர்வு காண முடியா விட்டால், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவர்களாலும் முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் தான், தலைமை நிலைய நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
எப்படி இருந்தாலும், கட்சி பிரச்னைகள் அனைத்தும், இம்மாத இறுதிக்குள் தீர்வு காண வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு சென்று, தீர்க்க வேண்டும்.
இவற்றை செய்தால் மட்டுமே, சட்டசபை தேர்தலில், எதிர்பார்த்த வெற்றியை தி.மு.க., பெறும் என முதல்வர் கூறியுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் - '.