கம்யூ., தலைவர்களே த.வெ.க., ஆட்சியை விமர்சிக்கின்றனர்: பழனிசாமி பேட்டி
கம்யூ., தலைவர்களே த.வெ.க., ஆட்சியை விமர்சிக்கின்றனர்: பழனிசாமி பேட்டி
UPDATED : செப் 09, 2026 05:15 AM
ADDED : செப் 09, 2026 05:05 AM

சென்னை: ''த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதாக சொல்கின்றனர்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி; சட்டசபை தினமும், பத்து மணி நேரம் நடப்பதாக பெருமை பேசுகின்றனர். ஆனால், மூன்று மணி நேரம் தான் மக்கள் பிரச்னைகளை பேசுகின்றனர். மீதி நேரம், ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் மாறி மாறி பேசி, நேரத்தை வீணடிக்கின்றனர்.
எந்த கேள்வி கேட்டாலும் மூன்று அமைச்சர்கள் மட்டும் தான் பதில் சொல்கின்றனர். காவல் துறை மானிய கோரிக்கையில் நான் கேட்ட கேள்விகளுக்கு, முதல்வர் எந்த பதிலும் சொல்லவில்லை.
முதல்வர், தன் பதிலுரையில், கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை நீண்ட காலமாக இருப்பதாக சொல்கிறார். முதல்வர் தான் அவற்றை தடுக்க வேண்டும். அவரே இப்படி சொன்னால், யாரிடம் போய் சொல்வது?
த.வெ.க., ஆட்சி அமைப்பதற்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களே, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்கின்றனர். த.வெ.க., ஆட்சி அமைந்த பின், அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து உள்ளன.
த.வெ.க., ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடித்தால், தமிழகத்தின் கடன் சுமை, 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து விடும். இவ்வாறு கூறினார்.
