sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

 தி.மு.க.,வில் ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி:பிரதமர் மோடி

/

 தி.மு.க.,வில் ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி:பிரதமர் மோடி

 தி.மு.க.,வில் ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி:பிரதமர் மோடி

 தி.மு.க.,வில் ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி:பிரதமர் மோடி

19


UPDATED : மார் 03, 2026 03:48 PM

ADDED : மார் 02, 2026 06:06 AM

Google News

19

UPDATED : மார் 03, 2026 03:48 PM ADDED : மார் 02, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தி.மு.க.,வில் ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டா போட்டி இருக்கிறது. இவர்கள் ஏழை, இளைஞர்கள், இளம் தலைமுறையிடம் இருந்து திருடுகிறார்கள். இந்த ஊழல் அரசு தொடர எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது,'' என, மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

'வெற்றிவேல், வெற்றிவேல், வெற்றிவேல்' எனக்கூறி பேச்சை அவர் துவங்கினார். தொண்டர்கள் வீரவேல் என முழக்கமிட்டனர்.

பிரதமர் மோடி பேசியதாவது: என் அன்னை மீனாட்சி, அய்யன் சுந்தரேஸ்வரை தலை வணங்கி வணங்குகிறேன். இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி. மகத்தான பூமியில் பிறந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மாவீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுசகோதரர்கள் ஆகியோரை நினைவுகூர்கிறேன். நீதிக்கும், கண்ணியத்திற்கும் போரிட்ட இமானுவேல் சேகரனின் பாதங்களை பணிந்து நினைவு கூர்கிறேன்.

மதுரை மக்கள் என் மீது பொழிந்த பேரன்பு, கடந்த மாதம் மலேசியாவுக்கு நான் சென்றிருந்ததை நினைவு ஊட்டுகிறது. அங்கு என் மீது பொழிந்த நேசம், அன்பு, பாசம் அபூர்வமானது. தமிழ் கலாசாரத்தை அங்கே ஆதரிக்க வேண்டி, ஏற்கனவே மலாலய பல்கலையில் திருவள்ளுவர் இருக்கை ஒன்றை நாங்கள் ஏற்படுத்தி இருக்கிறோம். இப்போது அங்கே திருவள்ளுவர் மையமும் நாங்கள் அமைத்து வருகிறோம்.

தே.ஜ.,கூட்டணியின் அரசு


தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். இங்கே திரண்டு இருக்கிற தே.ஜ., கூட்டணியின் மாபெரும் கூட்டத்தை பார்த்தபிறகு அவர்களின் கனவுகள் எல்லாம் கற்பனை கோட்டைகளாக, கானல் நீராக மாறி போய்விடும். இத்தேர்தல் தமிழகத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். தி.மு.க., வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்து விட்டார்கள். தே.ஜ., கூட்டணி மாற்றத்தை கொண்டு வரமுடியும் என மக்கள் தெளிவாக அறிவார்கள். தமிழ்நாட்டில் அடுத்த அரசு தே.ஜ., கூட்டணியின் அரசுதான் என்பதை நான் உங்கள் கண்களில் காண்கிறேன்.

தி.மு.க.,வின் சில்லரைத்தனம்


தி.மு.க., தாங்களும் ஏழைகளுக்கு பணியாற்ற மாட்டார்கள். மற்றவர்களையும் பணியாற்ற விடமாட்டார்கள். பிரதம மந்திரி ஊரக பகுதிவீட்டு வளர்ச்சி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இதன்காரணமாக குடும்பங்களுக்கு சொந்தமான கவுரவமாக வாழ வீடு கிடைத்துள்ளது. அதேசமயம் 3 லட்சம் வீடுகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. ஏன் தெரியுமா. தி.மு.க., அரசு இன்னும் கள ஆய்வு செய்யவில்லை. தி.மு.க.,வின் சில்லரைத்தனமான அரசியல் காரணமாக ஏன் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் அவதிப்பட வேண்டும்.

தமிழ்நாடு ஒரு தரைப்பகுதி மாநிலம். இங்கு அளவில்லாத சாத்தியகூறுகள் உள்ளன. ஆனால் காங்கிரசும், தி.மு.க.,வும் 2014க்கு முன்னால் கூட்டாச்சி நடத்திய போது இவர்கள் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

கடந்த 12 ஆண்டுகளில் 12 ஆயிரம் கோடி பெறுமானமுள்ள 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும், புதிய பொருளாதார சந்தர்ப்பங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றி வாய்கிழிய பேசும் இவர்கள், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒன்றுமே செய்யவில்லையே.

ராமேஸ்வரம் செல்லும் பழைய பாம்பன் பாலம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையாக இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அதுமாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த தி.மு.க.,வும், காங்கிரசும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். ரயில்கள் பாலத்தை மெதுவாக கடக்க வேண்டியிருந்தது என்றால், அவர்களின் அரசாங்க கோப்புகள் அதைவிட மெதுவாக கடந்து கொண்டிருந்தன.

நம் அரசுதான் தற்போதைய நவீன பாம்பன் பாலத்திற்கு ஒப்புதல் அளித்தது. கடந்தாண்டு இதை துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாங்கள் வேலையில் வேகத்தை காட்டினோம். இதன்காரணமாக இப்போது ரயில்கள் வேகமாக பயணிக்க முடிகிறது.

2009ல், 14வது ஆண்டில் ரயில்வேக்கு வருடாந்திர நிதிஒதுக்கீடு ரூ.880 கோடி ரூபாய். மத்தியில் காங்கிரசும், தி.மு.க.,வும் ஆட்சி செய்தபோது இருந்த நிலைமை இதுதான். ஆனால் இப்போது 2026 -27 ல் ரூ.7600 கோடி. 9 மடங்கு அதிகம். மாநிலத்திற்கு நல்லது செய்ய முடிந்த காலத்தில் இந்த காங்கிரசும், தி.மு.க.,வும் ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் இன்றைக்கு வாய்க்கிழிய பேசுகிறார்கள். கூப்பாடு போடுகிறார்கள்.

சிறை செல்வது உறுதி


இன்று தமிழகத்தில் பெண்கள் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளனர். குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடக்கின்றன. போதை பொருள் மாபியா கும்பல், மதுபானத்தால் தங்கள் குடும்பம் அழிக்கப்பட்டு வருவதை பெண்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார். ஜெயலலிதா ஆட்சியில் தங்கள் வாழ்க்கை எத்தனை சிறப்பாக இருந்தது என்பதை பெண்கள் இப்போது நினைத்து பார்க்கிறார்கள்.

ஆனால் நான் தமிழக பெண்களுக்கு உறுதியாக ஒன்றை கூறுகிறேன். தே.ஜ., கூட்டணி ஆட்சி வந்ததும் சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவோம். குற்றவாளிகளும், போதைப்பொருள் மாபியாக்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள். தே.ஜ., கூட்டணி அரசு உங்களின் பாதுகாப்பு, கண்ணியம், அதிகார பரவலாக்கத்தை உறுதி செய்யும்.

அரசியலில் நேர்மை என்பதற்கு உதாரணமாக முன்னாள் முதல்வர் காமராஜர் திகழ்ந்தார். தி.மு.க., அதற்கு நேர் எதிரானது. பொதுவாக நல்ல பணியாற்றும் அமைச்சர்கள் மத்தியில் ஆரோக்கியமாக போட்டி இருக்கும். ஆனால் தி.மு.க.,வில் ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டா போட்டி இருக்கிறது. இவர்கள் ஏழை, இளைஞர்கள், இளம் தலைமுறையிடம் இருந்து திருடுகிறார்கள்.

இந்த ஊழல் அரசு தொடர எந்தவொரு தார்மீக உரிமையும் கிடையாது. அதனால் தான் தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி அரசை கொண்டு வர வேண்டும் என மக்கள் தீர்மானம் செய்து விட்டார்கள். நாங்கள் துாய்மையான திறமையான ஆட்சியை தருவோம்.

காங்கிரசை 60 ஆண்டுகளாக தமிழ்நாடு விலக்கி வைத்தது. காங்கிரசில் இருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் தமிழ்நாடு. இதனால் தமிழ்நாட்டின் மீது காங்கிரஸ் வஞ்சத்தை தீர்த்தது.

கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்து கொடுத்தது. அப்போது தி.மு.க., மவுனமாக இருந்தது. மத்தியில் இருந்த காங்கிரசுக்கு தி.மு.க., ஆதரவளித்தபோது அவர்கள் ஜல்லிக்கட்டை தடை செய்தனர். ஆனால் ஜல்லிக்கட்டை தொடர நம் அரசுதான் அவசர சட்டம் பிறப்பித்தது. பார்லிமென்ட்டில் செங்கோலுக்கு பெருமிதமான இடத்தை அளித்து நாம்தான் தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளித்தோம்.

வளர்ச்சியடைந்த தமிழ்நாடு


அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினோம். நாம் இப்போது 28 முன்னேறிய நாடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

இதனால் தமிழ்நாட்டின் இளைஞர்கள், பணியாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு. தமிழ்நாட்டின் ஜவுளித்துறை, மின்னணு தயாரிப்பு துறை, கடல்சார் உணவு ஏற்றுமதியாளர்கள், ஆயிரக்கணக்கான மத்திய சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இவர்கள் அனைவருக்கும் உலகளாவிய சந்தைகள் கிடைக்கும். இன்னும் அதிகளவு ஆர்டர்கள். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் சிறப்பான விலை கிடைக்கும்.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பல லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும். உலகளவில் போட்டியிட்டு வெற்றி பெற தமிழகத்திற்கு சந்தர்ப்பம். ஆனால் இதெல்லாம் நடக்க நிலையான, மக்களை மையமாக கொண்ட தே.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும். வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு பேசினார்.

பேச்சின் முடிவில் உணர்ச்சி பூர்வமாக 'வந்தேமாதரம்' என தொடர்ந்து பிரதமர் கூற, கூட்டத்தினரும் உணர்ச்சிபூர்வமாக கூறினர்.

மதுரை மாநகராட்சி ஊழல் குறித்து பேசிய பிரதமர்


பிரதமர் பேசியதாவது: 2021ல் 25 ஆண்டுகாலத்திற்கு பிறகு தமிழக மக்கள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக முழு பெரும்பான்மையை அளித்தனர். ஆனால் அவர்களால் நல்லாட்சியை அளிக்க முடியவில்லை. தமிழகத்தை கொள்ளையடித்தனர். பரம்பரை அரசியலை முன்னெடுத்தனர். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்ணோடு மண்ணாக்கினர். மதுரையை உயிருக்கு உயிராக நேசித்த எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக நின்றது மதுரை. அதனால்தான் தி.மு.க.,வுக்கு மதுரை என்றால் வேப்பங்காயாக இருந்து வந்துள்ளது.
தி.மு.க.,தான் மதுரைக்கு மாபியா, கொள்ளைகூட்ட ரக அரசியலை அறிமுகப்படுத்தியது. அவர்கள் என்ன அளித்தார்கள். மோசமான சாலை, கேவலமான கழிவுநீர் வடிகால், கழிவுப்பொருள் மேலாண்மையின்மையே அளித்தார்கள். சுத்தம், சுகாதாரம், துாய்மை தரவரிசையில் மதுரையை தரைமட்ட அளவிற்கு கொண்டு போனார்கள். ஊழல் காரணமாக மதுரை மேயர், தனது பதவியை துறக்க நேர்ந்தது. இதுதான் அவர்களின் மாடல். என்ன மாடல் என்றால் பணம் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே.இவ்வாறு பேசினர்.



உதயநிதிக்கு பிரதமர் குட்டு


'என்னிடமோ, என் தந்தையிடமோ பயமில்லை' என தி.மு.க.,வில் யாரோ ஒருவர் பேசியதாக வேள்விப்பட்டேன். ஜனநாயகத்தில் யாரும், யாருக்கும் பயப்பட தேவையில்லை. என்னிடத்தில் (மோடியிடம்) பயம் இல்லை என்று யாராவது கூறினால் அவர்கள் என்னை விமர்சிக்கவில்லை. ஜனநாயக நன்மதிப்புகள் விழுமியங்களில் எனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். பாவம், தங்களுக்கு தெரியாமல் அவர்கள் எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கி விட்டார்கள். (யாரோ ஒருவர் என பிரதமர் மறைமுகமாக குறிப்பிட்டது துணைமுதல்வர் உதயநிதியை)



மோடி வாசித்த தி.மு.க.,வின் ஊழல் பட்டியல்


1. பணியிட மாற்ற விவகாரத்தில் ரூ.365 கோடி
2. அரசுப்பணிகள் வாங்கி தரும் விஷயத்தில் ரூ.900 கோடி ஊழல்
3. அரசுப்பணி ஒப்பந்தம் பெறுவதில் ரூ.1000 கோடி
4. மணல் திருட்டு ரூ.4700 கோடி மோசடி
5. டாஸ்மாக் மோசடி மட்டுமே ரூ.40 ஆயிரம் கோடி



முருகப்பெருமானிடம் வேண்டியது என்ன?


பிரதமர் நெகிழ்ச்சியுடன் பேசியது: இங்கு வருவதற்கு முன் நான் திருப்பரங்குன்றம் கோயில் சென்று இருந்தேன். முதல் படைக்கு சொந்தக்காரர் முருகனை தரிசித்தது தெய்வீக அனுபவமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த நல்வளர்ச்சிக்காக வேண்டினேன். அதேசமயம் இதயம் கனித்தது. இளம் முருகபக்தர் பூர்ண சந்திரன் உயிர்தியாகம் செய்தார் என்பதை நினைத்து பார்த்தேன். அவரது மனைவி இந்துமதி, அவர்கள் இரு குழந்தைகளையும் சந்தித்தேன். அவர்களின் துக்கத்தை என்னால் உணர முடிந்தது. எனது ஆழமான இரங்கலை தெரிவித்தேன். பூர்ணசந்திரன் ஆத்மா அமைதி அடைய நான் உருக்கமான பிரார்த்தனையை முருகப்பெருமானின் திருவடியில் அர்ப்பணம் செய்கிறேன். ஆனால் தி.மு.க., அரசின் நேர்மையற்றதன்மை காரணமாகவே இது நடந்தது. இது வலியை ஏற்படுத்துகிறது. தி.மு.க., என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனின் பக்தர்களே வெல்வார்கள்.








      Dinamalar
      Follow us