தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தமிழிசை புதுச்சேரியில் போட்டி?

தமிழிசை புதுச்சேரியில் போட்டி?

தமிழிசை புதுச்சேரியில் போட்டி?


ADDED : பிப் 05, 2024 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 12:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, புதுச்சேரியில் போட்டியிடும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழிசை சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 'புதுச்சேரி வளர்ச்சிக்காகவே அமித் ஷாவை சந்தித்தேன்' என, தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதுச்சேரி லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு எதிராக பா.ஜ., போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

சமீபத்தில் முதல்வர் ரங்கசாமியுடன், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆலோசனை நடத்தி, இதை உறுதி செய்தார். மக்களிடம் நன்கு அறிமுகமான ஒருவரை வேட்பாளராக்கும்படி, முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுச்சேரியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை, ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரில் ஒருவரை களமிறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று முன்தினம் தமிழிசை சந்தித்து பேசினார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவே அமித் ஷாவை சந்தித்து பேசினார் என்ற தகவல் பரவி வருகிறது.

புதுச்சேரி, தென் சென்னை, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய நான்கு தொகுதிகளில், ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என, தமிழிசை ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டில்லியில் இருந்து நேற்று காலை சென்னை திரும்பிய தமிழிசை, விமான நிலையத்தில் அளித்த பேட்டி:

நான் டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசியது, திடீர் சந்திப்பு அல்ல; ஏற்கனவே திட்ட மிட்ட சந்திப்பு தான். அமித் ஷாவை சந்தித்ததற்கும், பஞ்சாப் கவர்னர் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டம் பற்றி தான் ஆலோசித்தேன்.

புதுச்சேரி சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

விமான நிலையத்தை விரிவாக்க வேண்டும். மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன்.

இவ்வாறு தமிழிசை கூறினார்.

'தேர்தல் அரசியலில் நீங்கள் ஈடுபடுவீர்களா?' என்ற கேள்விக்கு, ''ஆண்டவனும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் முடிவு செய்வர்,'' என்றார்.------

கவர்னர் ரவி டில்லி பயணம்

தமிழக கவர்னர் ரவி, நேற்று காலை 11:15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணியர் விமானத்தில், சென்னையில் இருந்து, மூன்று நாள் பயணமாக, டில்லி புறப்பட்டார். டில்லியில் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசலாம் என, கூறப்படுகிறது.கவர்னர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் பிரச்னை தொடர்கிறது. கவர்னர் ரவியின் செயல்பாடுகள் குறித்து, பார்லிமென்டிலும் பேச்சு எழுந்தது. கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. வரும், 12ம் தேதி, சட்டசபையில், கவர்னர் ரவி உரை நிகழ்த்த உள்ளார். புதுச்சேரி கவர்னர் தமிழிசை, நேற்று முன்தினம் அவசரமாக டில்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசிவிட்டு, நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், கவர்னர் ரவி டில்லி சென்றுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us