திருப்பூர் தி.மு.க., அலுவலகங்களில் மின் இணைப்பில் முறைகேடு என புகார்
திருப்பூர் தி.மு.க., அலுவலகங்களில் மின் இணைப்பில் முறைகேடு என புகார்
ADDED : டிச 08, 2025 06:59 AM

திருப்பூர்: திருப்பூரில் செயல்படும் தி.மு.க., தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் மின் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம் ராஜாராவ் வீதியில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் தற்போது ஐந்து மின் இணைப்புகள் உள்ளன. இதில் இணைப்பு எண்கள், 2200011410, 1411 மற்றும், 1413 ஆகிய மூன்று இணைப்புகள் வீட்டு உபயோக மின் இணைப்புகள். மேலும், அதே கட்டடத்தில், 2200011108 மற்றும், 2200011595 ஆகிய இரு இணைப்புகள் வணிக பயன்பாட்டு இணைப்புகளாக உள்ளன.
இந்த ஐந்து இணைப்புகளும் தி.மு.க., பொதுச்செயலர் என்ற பெயரில் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கு, மாவட்ட செயலராக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளார்.
வடக்கு மாவட்ட தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம், வேலம்பாளையம் ரோட்டில் ஒரு வாடகை கட்டத்தில் அமைந்துள்ளது. பிரகாஷ் என்பவர் பெயரிலான இந்த கட்டடத்துக்கு டேரிப் 3ல், தொழிற்சாலை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு செயல்பட்ட தொழிற்சாலை நிறுத்தப்பட்ட நிலையில், இது பயன்பாடின்றி இருந்தது.
கடந்த மார்ச் மாதம் இந்த வளாகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்துக்கு வாடகைக்கு விடப்பட்டது. இதன் செயலராக திருப்பூர் மேயர் தினேஷ்குமார் உள்ளார். இங்குள்ள, 168003740 என்ற எண்ணுள்ள மின் இணைப்பு, தொழிற்சாலைக்கான கட்டணமாக உள்ள நிலையில், தற்போது அலுவலக பயன்பாட்டுக்கு இது வரை மாற்றப்படாமல் உள்ளது.
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கூறியதாவது: அலுவலகங்களுக்கு வணிக மின் இணைப்புதான் பெறப்பட வேண்டும். ஆனால், வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மின் இணைப்பு முறைகேடு குறித்து, மின் வாரியத்தினருக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மின் திருட்டு தடுப்பு பறக்கும் படைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை இல்லை.
இதேபோல், தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் உள்ள முறைகேடு மின் இணைப்புகள் குறித்தும் மின் வாரியத்துக்கு புகார் அளித்துள்ளேன். அதிகாரிகள் நடவடிக்கைக்கு முன்னதாக அவற்றை வகை மாற்றம் செய்வதற்கான பணிகளை துவங்கியுள்ளனர். முறைகேடாக பயன்படுத்தியதற்கான அபராத நடவடிக்கை, கூடுதல் மின் இணைப்புகள் துண்டிப்பு போன்ற விதிமுறைகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

