தொகுதிக்கே செல்லாத எம்.எல்.ஏ.,: காங்கிரஸ் போஸ்டரால் பரபரப்பு
தொகுதிக்கே செல்லாத எம்.எல்.ஏ.,: காங்கிரஸ் போஸ்டரால் பரபரப்பு
ADDED : டிச 15, 2025 05:07 AM

காங்கிரஸ் எம்.எல்.ஏ., அமிர்தராஜுக்கு மீண்டும் போட்டியிட 'சீட்' வழங்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியினரே 'போஸ்டர்' ஒட்டியிருப்பது, அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி தெற்கு மாவட்ட காங்., தலைவரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அமிர்தராஜ், வரும் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால், மீண்டும் அவருக்கு சீட் வழங்கக் கூடாது என, துாத்துக்குடி மாவட்ட காங்கிரசார் போர்க் கொடி துாக்கி உள்ளனர்.
தீர்மானம்
ஏற்கனவே, 'வரும் தேர்தலில், காங்கிரசுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதியை ஒதுக்கக் கூடாது; தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்' என, சில மாதங்களுக்கு முன், தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமிர்தராஜ், ''தொகுதியின் தேவை குறித்து, சட்டசபையில் கோரிக்கை வைத்தால் செய்து கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால், தி.மு.க., அரசு எதுவுமே செய்யவில்லை' என்றார். இது, தி.மு.க.,வினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து, ஸ்ரீவைகுண்டம் தி.மு.க., நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டினர்.
இதற்கிடையே, காங்கிரசுக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த வந்த மேலிட பார்வையாளரிடம் , அமிர்தராஜுக்கு எதிராக காங்கிரசார் மனு அளித்தனர்.
அதில், 'ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நிரந்தரமாக குடியிருந்து, மக்கள் பணியாற்றும் நபருக்குத்தான், சட்டசபை தேர்தலில் சீட் வழங்க வேண்டும்; மாவட்ட தலைவர் பதவியும் அப்படித்தான் வழங்க வேண்டும்' என கூறி இருந்தனர்.
இந்நிலையில், அமிர்தராஜுக்கு எதிராக, சென்னையில் காங்கிரஸ் கட்சியினரே போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
கோஷ்டி பூசல்
கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அருகிலும், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் அருகிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
போஸ்டரில், 'தொகுதி மக்கள் பேசினால், மொபைல் போன் எடுக்காத; பெரும் வெள்ளம் எச்சரிக்கை விடுத்த போதும், தொகுதி பக்கம் வராத எம்.எல்.ஏ., அமிர்தராஜுக்கு மீண்டும் சீட் வழங்கக் கூடாது' என கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள், காங்.,கின் கோஷ்டி பூசலை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
- நமது நிருபர் -

