வீடுகள் அடித்து செல்லும் அபாயம்: தென்பெண்ணையாற்று கரையில் தொடர் மண் அரிப்பு
வீடுகள் அடித்து செல்லும் அபாயம்: தென்பெண்ணையாற்று கரையில் தொடர் மண் அரிப்பு
UPDATED : டிச 14, 2024 04:41 AM
ADDED : டிச 14, 2024 03:58 AM

பாகூர்: கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாறு படுகை அணை கரையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறி 100 மீட்டர் நீளத்திற்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீரில் அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகூர் அடுத்துள்ள கொம்மந்தான்மேடு தென்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த 2011ம் ஆண்டு புதுச்சேரி அரசு சார்பில், தரைப்பாலத்துடன் கூடிய தடுப்பு அணை கட்டப்பட்டது. முறையான திட்டமிடலின்றி கட்டுமானம் அறைகுறையாக இருந்ததால், ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம், பாலத்தின் இரு புறங்களிலும் மண் அரிப்பு ஏற்பட்டு நீரில் அடித்து செல்கிறது.
அதேபோல், சில ஆண்டிற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தரைப்பாலம் இரண்டாக உடைந்து சேதமான நிலையில், வடக்கு கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் குளம் போன்ற பள்ளம் ஏற்பட்டது.
தெற்கு கரையில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, தமிழக அரசு சார்பில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி எல்லை பகுதியில், உடைப்பு ஏற்பட்ட கரை பகுதி மட்டும் மண் கொட்டி தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், இதுவரை கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. மண் அரிப்பு ஏற்பட்ட இடமும் சரி செய்யப்படவில்லை.
படுகை அணை கட்டியது முதல் இதுவரை பராமரிப்பு , பழுதுபார்த்தல் என்ற பெயரில் பல கோடி ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இந்த அணையின் கரையில் உடைப்பு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், பெஞ்சல் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சாத்தனுார் அணை திறக்கப்பட்ட நிலையில், தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பாகூர், சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, குருவிநத்தம், கொம்மந்தான்மேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
மேலும், வழக்கம் போல், கொம்மந்தான்மேடு படுகை அணையின் கரையில் உடைப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட உடைப்பு சரி செய்யாத நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கரை பகுதியில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மண் அரிப்பு அதிகரித்துள்ளது.
தற்போது, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால், உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக தண்ணீர் வெளியேறி, கரை பகுதியில் மண் அரிப்பை ஏற்படுத்தி வருகிறது. மண் அரிப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இது உடனடியாக சீரமைக்காவிட்டால், கொம்மன்தான்மேடு கிழக்கு பகுதியான தமிழக எல்லை குடியிருப்புகள் மண் அரிப்பு காரணமாக நீரில் அடித்து செல்லும் ஆபத்து உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதனையொட்டி, புதுச்சேரி பொதுப்பணித்துறையினர், உடைப்பு ஏற்பட்ட கரையை சீரமைக்க நடவடிக்கையை துவக்கியுள்ளனர்.
முதற்கட்டமாக பெரிய அளவிலான கான்கிரீட் சிமெண்ட் கட்டைகளை உடைப்பு ஏற்பட்ட படுகை அணை இணைப்பு சாலையில் கொட்டி நீரோட்டத்தின் வேகத்தை குறைத்து திசை மாற்றிடவும், கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.