ADDED : பிப் 19, 2024 03:44 AM

லோக்சபா தேர்தல் பிரசார பொறுப்பை முழுமையாக அமைச்சர் உதயநிதியிடம் வழங்க, கட்சி தலைமை முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில், காங்., - இரு கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளன. பலமான கூட்டணியாக அறியப்படும் இக்கூட்டணியில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் தரப்பில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது.
தி.மு.க.,வின் எதிர்ப்பு ஓட்டுகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளால் பிரியும் சூழல் உள்ளதால், எளிதாக வெற்றிக் கொடி நாட்டி விடலாம் என, தி.மு.க., மேலிடம் மிகுந்தநம்பிக்கையுடன் உள்ளது.
தலைமை
தேர்தல் கருத்துக் கணிப்புகளும், தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாக உள்ளதால், உற்சாகமடைந்த கட்சி தலைமை, இந்தச் சூழலை, உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
முக்கியமாக, லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்கான பொறுப்பை முழுமையாக, அமைச்சர் உதயநிதியிடம் வழங்கும் வியூகத்தையும், கட்சி தலைமை வகுத்துள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: சமீப காலமாக, ஆட்சி மற்றும் கட்சிப் பணிகளில் முக்கியமான நிகழ்வுகள் தவிர, மற்ற எல்லா நிகழ்வுகளுக்கும், தனக்கு பதிலாக உதயநிதியை தான், முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைக்கிறார். பாளையங்கோட்டை எம்.எல்.ஏ., அப்துல் வஹாபின் மகன் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்த தேதி கேட்டு, ஓராண்டாக தள்ளி வைக்கப்பட்டது.
சமீபத்தில், அப்துல் வஹாபை அழைத்த முதல்வர் ஸ்டாலின், 'இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்; என் இடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையேற்று திருமணத்தை நடத்துவார். பிப்., 18ல் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, நேற்று உதயநிதி தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது.
இதேபோல, திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, திட்டங்களை துவங்கி வைப்பது என, அரசு நிகழ்ச்சிகளுக்கும் உதயநிதி அனுப்பி வைக்கப்படுகிறார். சமீபத்தில், பில்லுார் - 3 குடிநீர் திட்டத் துவக்க விழா, திருப்பூரில் நடந்தது. அந்தத் திட்டத்தையும் துவங்கி வைத்தது உதயநிதி தான்.
பங்கேற்பு
கடந்த தேர்தல்களை போல, வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின்,தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதில்லை. அவருடைய பணி முழுதும், அமைச்சர் உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. முக்கியமான நகரங்களில் நடக்கும் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் மட்டும், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார்.
இண்டியா கூட்டணிக்காக, மற்ற மாநிலங்களில் முக்கியமான நகரங்களில் நடக்கும் பிரசார கூட்டங்களில் பங்கேற்கவும், ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

