ADDED : ஜன 26, 2025 02:40 AM

புதுடில்லி: தமிழக அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டி - சட்டையும், வட மாநில அரசியல்வாதிகள் வெள்ளை குர்தாவும் அணிவது தான் வழக்கம். தற்போது, எல்லாமே மாறி வருகிறது. கருணாநிதி காலம் வரை, தி.மு.க.,வில் தொடர்ந்த வேட்டி - சட்டை கலாசாரம் மெதுவாக மாறத் துவங்கி, தற்போது முதல்வரும், துணை முதல்வரும், பேன்ட் - சட்டை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
காங்கிரசிலும் மாற்றம் துவங்கி விட்டது. காங்கிரசார் அணியும் பாரம்பரிய உடையை ராகுல் மாற்றிவிட்டார். டி - ஷர்ட் அணிந்து தான், பார்லிமென்டுக்கே வருகிறார். இதை பா.ஜ., கிண்டல் செய்தாலும், அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை.
வெள்ளை டி ஷர்ட் அணிய வேண்டும் என, கட்சியினருக்கும் உத்தரவிட்டு உள்ளார். இதற்கு, 'வெள்ளை புரட்சி' என, பெயரும் வைத்துவிட்டார். 'பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்., - எம்.பி.,க்கள் அனைவரும் வெள்ளை டி ஷர்ட்டில் தான் வர வேண்டும்' என சொல்லி விட்டாராம் ராகுல்.
காங்கிரஸ் என்றாலே காதி உடை, வெள்ளை குல்லா என, காந்தி காலத்திலிருந்து இருந்து வந்தது. இந்த பாரம்பரியத்திற்கு, 'குட்பை' சொல்லி விட்டார் ராகுல்.

