தபால் துறையின் 'டிஜிபின்' டிஜிட்டல் முகவரி அறிமுகம்
தபால் துறையின் 'டிஜிபின்' டிஜிட்டல் முகவரி அறிமுகம்
ADDED : ஜூன் 12, 2025 03:26 AM

புதுடில்லி: தற்போதைய பின்கோடு பயன்பாட்டை விட, துல்லியமாக ஒருவரின் இருப்பிடத்தை அறியச் செய்வதற்காக, 'டிஜிபின்' எனப்படும் 'டிஜிட்டல் போஸ்டல் இண்டெக்ஸ் நம்பர்' என்ற டிஜிட்டல் முகவரி குறியீட்டை சமீபத்தில் தபால்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐ.ஐ.டி., ஹைதராபாத், தேசிய ரிமோட் சென்சிங் மையம் மற்றும் இஸ்ரோ ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய தபால் துறை இதை உருவாக்கிஉள்ளது.
நாட்டின் அனைத்து பகுதிகளையும், தோராயமாக நான்குக்கு நான்கு மீட்டர் கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டத்துக்கும் தனித்துவமான 10 இலக்கங்கள் கொண்ட எண்கள் மற்றும் எழுத்துகள் கலந்த குறியீட்டை டிஜிபின் வழங்குகிறது.
இது வழக்கமான அஞ்சல் முகவரியை விட வித்தியாசமானது. ஏனென்றால், வழக்கமான அஞ்சல் முகவரிகள் பகுதி, தெரு மற்றும் வீட்டு எண்களைச் சார்ந்து இருக்கும்.
ஒரே பின்கோடு, பெரிய பகுதியை உள்ளடக்கி இருக்கும். ஆனால், டிஜிபின் வெறும் நான்கு மீட்டர் சதுரத்துக்கு ஒன்றாக, துல்லியமாக முகவரியை வழங்கும்.
டிஜிபின் எதற்கு?
இடம் சார்ந்த துல்லியமான அடையாளத்தை வழங்குவதன் வாயிலாக, முகவரியை கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது. குறிப்பாக கிராமப்புறங்கள், காடுகள் மற்றும் கடல்கள் போன்ற நிலையான முகவரி இல்லாத இடங்களில் இது மிக உதவியாக இருக்கும்.
இணைய வசதி அவசியமா?
இல்லை. இதை இணையதள வசதி இல்லாமல் ஆப்லைனிலும் பயன்படுத்தலாம்.
டிஜிபின் பெறுவது எப்படி?
அதிகாரப்பூர்வ வலைதளம் https://dac.indiapost.gov.in/mydigipin/home இதில் உங்கள் இருப்பிடத்தை உள்ளிடவும். தாமாகவும் உள்ளிடலாம், மொபைல் லொகேஷனையும் பயன்படுத்தலாம். உங்கள் இருப்பிடத்துக்கான தனிப்பட்ட 10 இலக்க டிஜிபின் உருவாக்கப்படும். இதை அரசு சேவைகள், டெலிவரி மற்றும் முகவரி சரிபார்ப்பு போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்.
இதனால் தபால் முகவரி மாறுமா?
மாறாது.
வேறு என்ன பயன்?
துல்லியமான இடத்தை அடையாளப்படுத்துவதால், அவசர கால சூழலில் மிகவும் உதவிகரமானதாக இருக்கும். நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் தொலைதுார பகுதிகள் என அனைத்து இடங்களிலும் செயல்படும்.
தபால் டெலிவரி, ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி, சரக்கு போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுச் சேவை வினியோகம் உள்ளிட்டவை டிஜிபின்னால் பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பானதா?
எந்த வித தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்கவோ, வெளிக்காட்டவோ இடமில்லை. இதனால், தனியுரிமைக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்து இல்லை.