'புறம்போக்கெல்லாம் தலைவர் இல்லை' காங்., நிர்வாகி விமர்சனத்தால் கடும் எரிச்சலில் தி.மு.க.,
'புறம்போக்கெல்லாம் தலைவர் இல்லை' காங்., நிர்வாகி விமர்சனத்தால் கடும் எரிச்சலில் தி.மு.க.,
ADDED : ஜன 14, 2026 05:05 AM

சென்னை: 'காங்கிரஸ்காரனுக்கு காந்தியும், காமராஜரும் தான் மாபெரும் தலைவர்கள்; புறம்போக்குகள் எல்லாம் தலைவர்கள் இல்லை' என, தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான திருச்சி வேலுசாமி கூறியிருப்பது, தி.மு.க.,வில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
'ஆட்சியில் பங்கு;
கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் வேண்டும்' என, தி.மு.க.,விடம் தமிழக காங்., தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்; 'அப்படி தராவிட்டால், விஜய் தலைமையிலான த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம்' எனவும் காங்., மேலிடத்திடம் கூறுகின்றனர்.
இப்படி வலியுறுத்தல்கள் தொடரும்போதே, ராகுலின் நண்பரும், அகில இந்திய காங்., தரவுகள் பகுப்பாய்வு பிரிவு நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி, நேரடியாகவே விஜயை சந்தித்தார். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கரும் ஆட்சியில் பங்கு கேட்பதற்கு ஆதரவாக இருக்கிறார்.
தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோரும் ஆட்சியில் பங்கு கேட்டு பகிரங்கமாக பேசி வருகின்றனர்.
சமூக வலைதள பக்கத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி., பதிவிடும் கருத்துகள் அனைத்தும், தி.மு.க.,வை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளன. அவருக்கு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் தொடர்ந்து பதிலளித்தனர்.
எனினும், கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வென்ற தொகுதிகளில் 50க்கும் மேற்பட்டவற்றில், கூட்டணி பலத்தால் வெற்றி கிடைத்தது என்பதை சுட்டிக்காட்டி, ஆட்சியில் பங்கு அளிப்பதில் என்ன தவறு எனவும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்ப, அதற்கு மட்டும் தி.மு.க., தரப்பில் பதில் எதுவும் இல்லை.
இவரை போலவே, காங்--., பிரமுகர் திருச்சி வேலுசாமியும், பேட்டி, அறிக்கை வாயிலாக தி.மு.க.,வுக்கு எதிராக கருத்துகளை உரக்க கூறி வருகிறார்; பராசக்தி படத்தில் காங்கிரசை நேரடியாக விமர்சிப்பது குறித்தும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 'காங்கிரஸ்காரனுக்கு காந்தியும், காமராஜரும் தான் மாபெரும் தலைவர்கள்; புறம்போக்குகள் எல்லாம் தலைவர்கள் இல்லை.
'கருணாநிதி தான் மாபெரும் தலைவர் என்பவர்களுக்கு, காங்கிரஸ் கட்சி என்ன சின்ன வீடா?' என, 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் நேற்று திருச்சி வேலுசாமி பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, 'தமிழகத்தில் நடக்கும் தி.மு.க., ஆட்சி என்பது காமராஜர் ஆட்சி தான்' என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்திருக்கும் நிலையில், வேலுசாமியின் பதிவு, தி.மு.க.,வில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

