தி.மு.க., அரசு அலட்சியத்தால் 22 குழந்தைகள் உயிரிழப்பு; அ.தி.மு.க., குற்றச்சாட்டு
தி.மு.க., அரசு அலட்சியத்தால் 22 குழந்தைகள் உயிரிழப்பு; அ.தி.மு.க., குற்றச்சாட்டு
ADDED : அக் 11, 2025 04:51 AM

சென்னை: 'இருமல் மருந்தால், 22 குழந்தைகள் உயிரிழந்ததற்கு, தி.மு.க., அரசே பொறுப்பு' என, அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்து, மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு உயிர்களை இழந்து, ம.பி., அரசு கண்டறிந்து சொன்ன பின், 'சோதனை நடத்தி நச்சுத்தன்மை இருப்பதை, தி.மு.க., அரசு கண்டுபிடித்துள்ளது' என, அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இப்படியொரு விளக்கத்தை கொடுக்க, தி.மு.க., அரசுக்கு வெட்கமாக இல்லையா? மருந்து நிறுவனங்களை கண்காணிக்கும் லட்சணம் இது தானா? தமிழகம் முழுதும் உள்ள மருந்து நிறுவனங்களின் தரத்தை சோதனை செய்ய, தரக்கட்டுப்பாட்டு குழு செயல்பாட்டில் உள்ளதா?
எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது? தமிழகத்தில் தயாராகும் மருந்துகள் தரமாகத்தான் உள்ளன என்று, தி.முக., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? காலமுறை தரப்பரிசோதனை குறித்த விபரங்களை, நீதிமன்றம் கேட்கும்போது சமர்ப்பிக்க, அரசு தயாராக உள்ளதா?
அரசின் அலட்சியத்தால், 22 குழந்தைகளின் உயிர் போனதற்கு பொறுப்பேற்காமல், வழக்கம்போல, அரசியல் செய்யும் தி.மு.க.,வை பார்த்தால், மக்களின் உணர்வுகளை விட்டு, தி.மு.க., வெகுதுாரம் சென்று விட்டதையே காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.