அரசு பணியாளர்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க.,: பாஜக
அரசு பணியாளர்கள் போராட்ட பின்னணியில் தி.மு.க.,: பாஜக
ADDED : நவ 19, 2025 04:40 AM

சென்னை: ''வருவாய் துறை சங்கங்களின் அறிக்கை, மக்களின் ஓட்டுரிமையை தடுக்கும் வகையில் உள்ளது.
''இது, தி.மு.க., அரசின் துாண்டுதல்தான் என்பதை உணர வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
வருவாய்த் துறை சங்கங்களின் அறிக்கையானது, மவாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை பாதிக்கும் வகையில் உள்ளது.
இந்த அறிக்கையின் பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் துாண்டுதல் உள்ளது. வாக்காளர் திருத்தம் வந்து விட்டால், நேர்மையான, வெளிப்படையான வாக்காளர் பட்டியலை கொடுத்து விடுமோ, அதனால் தாங்கள் முறைகேடாக சேர்த்து வைத்துள்ள அல்லது நீக்கியுள்ள வாக்காளர்களை மாற்றி விடுவரோ என்ற அச்சத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
தேர்தல் கமிஷன், வாக்காளர் சிறப்பு திருத்த பணியை அறிவித்த உடனே, மாநில அரசு இயந்திரம், அந்த பணியில் ஈடுபட வேண்டும்.
'அரசு பணியாளர்கள் அன்றாட பணியை முடித்து விட்டு, பகுதி நேரமாக தான் பணிபுரிவர்' என்று சட்டம் கூறுகிறது. அரசு பணியாளர்கள், தேர்தல் கமிஷனுக்கு பணி செய்ய வேண்டும்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணியில், அரசு பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனில், நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
தேர்தல் கமிஷனின் முழு இயந்திரமே, மாநில அரசு பணியாளர்கள் தான். வருவாய்த் துறை சங்கத்தினரிடம் இருந்து அறிக்கை வந்ததும், முதல்வர் ஸ்டாலின் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இப்படி வாக்காளர் திருத்த பணியை தடைபடுத்த வேண்டும் என்று நினைப்பது, ஜனநாயக விரோத செயல். இவ்வாறு அவர் கூறினார்.

