கட்சியில் கோலோச்சும் 'தலை'களுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிடுக்கி
கட்சியில் கோலோச்சும் 'தலை'களுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கிடுக்கி
ADDED : ஜன 30, 2026 04:46 AM

சென்னை: தி.மு.க.,வில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து, விருப்ப மனு பெறுவது இன்னும் துவங்கப்படவில்லை. அதற்குள், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளில், 'நான் தான் வேட்பாளர்' என, தற்போதே வேட்பாளர்களாக வலம் வர துவங்கியுள்ளனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கருதுகிறார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியால் நெருக்கடி, த.வெ.க.,வால் திசை மாறும் ஓட்டுகள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த தி.மு.க., திட்டமிட்டுஉள்ளது. எனவே, இந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில், பலமான வேட்பாளர்களை நிறுத்த, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதற்காக, தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து, இதுவரை கட்சியில் ஆற்றிய பணிகள், யாரை வேட்பாளராக நிறுத்தலாம்; அந்த நபருக்கு உள்ள செல்வாக்கு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்துள்ளார்.
இது தவிர, உளவுப் பிரிவு போலீசார் வாயிலாகவும், வேட்பாளராக யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்ற தகவல்கள் பெறப்பட்டு உள்ளன. முதல்வரின் மருமகன் சபரீசனுக்கு வேண்டிய ஆய்வு நிறுவனம் வாயிலாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு மூன்று நபர்களை, ஸ்டாலின் அடையாளம் கண்டுள்ளார். அவர்களில் யாருக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சென்னை அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகனின் மகனும், ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பருமான கார்த்தி, அண்ணா நகர் வேட்பாளராக தன்னை கூறிக் கொண்டு, தன் ஆதர வாளர்களுடன் தொகுதியில் வலம் வருகிறார்.
இதேபோல், பல தொகுதிகளில் தி.மு.க., வில் அதிகாரமிக்க நபர்களுக்கு வேண்டியவர்கள், தாங்கள் தான் வேட்பாளர் என கூறி வருகின்றனர். இதனால், அந்த தொகுதிகளில் உள்ள சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த விபரம், ஸ்டாலின் கவனத்திற்கு சென்று உள்ளது. இதையடுத்து, அதுபோன்று வலம் வருபவர்களை அழைத்து கண்டித்துள்ளார். தலைமை அறிவிக்கும் வரை, தாங்கள் தான் வேட்பாளர் என கூறிக்கொண்டு, எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என தடை போட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

