கூட்டணி கட்சியினரை சந்திக்க தே.மு.தி.க.,வினருக்கு தடை: பிரேமலதா அதிரடி உத்தரவு
கூட்டணி கட்சியினரை சந்திக்க தே.மு.தி.க.,வினருக்கு தடை: பிரேமலதா அதிரடி உத்தரவு
ADDED : பிப் 23, 2026 04:55 AM

தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை தனியே சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என, தே.மு.தி.க., சீனியர்களுக்கு கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தடை விதித்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில் திடீரென தே.மு.தி.க., இணைந்த நிலையில், அக்கூட்டணியில் பல ஆண்டுகளாக தொடரும் காங்., - வி.சி., போன்ற கட்சிகளுக்கு, கூடுதல் தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இழந்த செல்வாக்கு
தே.மு.தி.க.,வை பொறுத்தவரை கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் வென்ற விருத்தாசலம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் மட்டுமே கேட்டு பெற முடிவு செய்துள்ளது. போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வென்று, இழந்த செல்வாக்கை மீட்க தே.மு.தி.க., திட்டமிடுகிறது.
இதற்கிடையே, விருப்ப மனு அளித்தவர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் சாதக, பாதகங்கள் குறித்து தே.மு.தி.க., தலைமை விபரம் கேட்டறிந்து வருகிறது. கடலுார் மாவட்ட கட்சி நிர்வாகிகளை சமீபத்தில் சந்தித்த பிரேமலதா, அம்மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்கு மற்றும் விஜயகாந்தின் தனிப்பட்ட செல்வாக்கு குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது, விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு, 'தி.மு.க., கூட்டணியில் தொகுதிகள் உறுதியானதும் அறிவிக்கப்படும். அதுவரை, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கக் கூடாது.
'தலைமையிடம் இருந்து முறையான அறிவிப்பு வரும்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்கலாம்; அதுவரை யாரையும் தனியே சந்திக்கக் கூடாது' என கறாராராக கூறி அனுப்பி வைத்து உள்ளார்.
முக்கிய புள்ளிகள்
தே.மு.தி.க., நிர்வாகிகள் கூறியதாவது: விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் என எந்த தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவார் என யூகிக்க முடியவில்லை. சொந்த தொழிலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், இந்த தேர்தலில் இளைஞரணி செயலர் விஜய பிரபாகரன் போட்டியிட மாட்டார் என தெரிகிறது.
தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை, கூட்டணி கட்சி நிர்வாகிகளை தே.மு.தி.க.,வினர் யாரும் தனியே சந்திக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 'நாங்களே சீனியர்கள்' என கூறி தி.மு.க., முக்கிய புள்ளிகளை சந்திக்கும் கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போடப்பட்டு விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

