UPDATED : பிப் 23, 2026 02:28 PM
ADDED : பிப் 23, 2026 05:01 AM

தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட 40 பேருக்கு 'சீட்' வழங்குமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் உதயநிதி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1980ல், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி துவக்கப்பட்டது. அன்றைக்கு ஸ்டாலினுடன் பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் தான், இன்றைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களாக உள்ளனர்.
20 பேர் தேர்வு
தற்போது இளைஞரணி செயலராக துணை முதல்வர் உதயநிதி உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில், இளைஞரணியைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தான் சீட் வழங்கப்பட்டது. அதனால், வரும் சட்டசபை தேர்தலில், 40 பேருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் உதயநிதி கோரிக்கை வைத்திருந்தார்.
இளைஞரணி செயலராக உதயநிதி பொறுப்பேற்றபோது, இளைஞரணியில் ஒன்றிய, நகர பேரூர் அமைப்பாளர்களாக 12,000 பேர் மட்டுமே இருந்தனர். இப்போது, கிளை, வார்டு, பாகம், ஓட்டுச்சாவடி என்ற அளவில், 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தன் சாதனையை உதயநிதி விஞ்சி விட்டதாக ஸ்டாலின் பாராட்டி வருகிறார்.
இந்நிலையில், மண்டல மாநாடுகள் நடத்தி, 5 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஜோயல், ஜி.பி.ராஜா, அப்துல் மாலிக், பிரபு, ஆனந்தகுமார், சீனிவாசன், இன்பா ரகு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ணராஜா, அலிப் மீரான், சவுந்தரராஜன், ஜான் ரவீந்திரன், ராஜா அன்பழகன் உட்பட, 20 பேரை உதயநிதி தேர்வு செய்துள்ளார்.
இவர்களுடன் சேர்த்து, மற்ற அணிகளில் உள்ள தன் ஆதரவு இளைஞர்கள் 20 பேரையும் உதயநிதி தேர்வு செய்துள்ளார். தன் நேரடி பார்வையில் தேர்வு செய்யப்பட்ட 40 பேர் பட்டியலை ஸ்டாலினிடம் அளித்துள்ளார். அவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்குமாறும் கேட்டுள்ளார்.
அந்த பட்டியலில் இடம் பெற்றோரில் யாருக்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து அறிய விரும்பிய முதல்வர் ஸ்டாலின், பட்டியலை வியூக அமைப்பான 'பென்' நிறுவனம் மற்றும் தமிழக உளவுத்துறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
தீவிர விசாரணை
இதையடுத்து, பட்டியலில் இடம் பெற்றோர் குறித்த விபரங்களையும், அவர்களுக்கு சீட் வழங்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பது குறித்தும், உளவுத்துறை மற்றும் 'பென்' அமைப்பினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இதற்கிடையில், இந்த தகவலை கேள்விப்பட்ட கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும், பட்டியலில் இடம் பெற்றோர் போட்டியிட திட்டமிட்டிருக்கும் தொகுதிகளில் தங்களுக்கோ, தங்களுடைய ஆதரவாளர்களுக்கோ வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.
- நமது நிருபர் -

