தி.மு.க., ஆட்சிக் காலம் கொடுமையானது: அண்ணாமலை பேச்சு
தி.மு.க., ஆட்சிக் காலம் கொடுமையானது: அண்ணாமலை பேச்சு
UPDATED : பிப் 26, 2026 09:51 AM
ADDED : பிப் 26, 2026 06:19 AM

கோவை: 'தி .மு .க., ஆட்சி காலம் கொடுமையானது,' என, கோவையில் அண்ணாமலை பேசினார்.
கோவை, காளப்பட்டி நேரு நகரில் பா.ஜ., சக்தி கேந்திரா தெருமுனை தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., அருண்குமார், சிங்கை தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராமன் பங்கேற்றனர். கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: அந்தந்த கட்சியினர் அவர்களது கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவர். பொதுமக்கள் தான், நடுநிலையோடு முடிவு செய்து ஓட்டளிப்பர். அவர்களுக்கு எடுத்துச் சொல்லவே தெருமுனை பிரசாரம்.
தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி. 2006 ம் ஆண்டிலிருந்து 2011 வரை நடந்த தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் தண்டனை கொடுத்தனர். அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், அதைவிட கொடுமையாக உள்ளது.
கோவை பகுதியில் மின் கட்டண உயர்வால் 325 மில்கள் மூடப்பட்டு விட்டன. மின் கட்டணத்தை குறைத்து வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்க வேண்டும். கோவை மெட்ரோ ரயில் 34 கி.மீ., தூரம் கொண்டது. மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட திட்ட வரைவு தவறுகள் உள்ளன. மாற்றி அனுப்புமாறு கோரியது. 20 லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகையை மாற்றி தர வேண்டும். கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரியது. ஆனால், மாற்றித் தரவில்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் வரும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது 4.64 லட்சம் கோடி மட்டுமே கடன் இருந்தது. தி.மு.க., ஆட்சியில் 6 லட்சம் கோடி கடன் கூடியுள்ளது. தற்போது 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கடனில் உள்ளது. இந்த கடன் மக்கள் மீதான கடனாக மாறி உள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.

