ADDED : ஆக 05, 2026 04:47 AM

சென்னை: பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக, தஞ்சையில் ஒன்பது பிரிவுகளின் கீழ் போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி, 48, சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் உதய நிதி தரப்பு மனு தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணையின் போது, 'உதயநிதியை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும் நோக்கம் இல்லை. அவரிடம் விசாரணை நடத்திய பின், காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப் படுவார்' என, அரசு தரப்பு கூறியது. அதை ஏற்று, போலீஸ் விசாரணை முடிந்து, இரவே அவரை விடுவிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டு
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியின் வீடு உள்ளது.
அங்கு, மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறார். தி.மு.க., சார்பில் , நேற்று முன்தினம் தஞ்சாவூரில் காவிரி பிரச்னை தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி பங்கேற்றார். அப்போது, பெண்கள் பற்றி ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீசார், ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
எதிர்ப்பு
இவ்வழக்கு தொடர்பாக, உதயநிதியை நேற்று கைது செய்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, சேகர்பாபு, சுப்பிரமணியன், உதயநிதியின் தங்கை கணவர் சபரீசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உதயநிதி கைது செய்யப்பட்டு இருக்கும் தகவல் காட்டு தீ போல பரவியது. இதனால், அவரது வீடு முன், ஏராளமான தி.மு.க., தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். எங்களை மீறி, உதயநிதியை அழைத்துச் செல்ல முடியாது என, சாலையில் படுத்து மறியல் செய்தனர்.
இதற்கிடையே, 'உதயநிதிக்கு முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதில், உத்தரவு வந்த பின், உதயநிதியை அழைத்துச் செல்லுங்கள்' என, தி.மு.க., முன்னாள் அமைச்சர்களும், உதயநிதி குடும்பத்தினரும், போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய நீண்ட பேச்சுக்கு பின் போலீசார் தங்களின் வாகனத்தில் உதயநிதியை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தி.மு.க.,வினர் வாகனத்தை மறித்து, அதில் ஏற முயன்றனர். போலீசார் சுற்றி நின்று, அவர்களை தடுத்தனர். முண்டியடித்ததால், வாகனம் நகர முடியாத நிலை ஏற்பட்டது.
பின், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். ஆனாலும், விடாமல் நீலாங்கரை சந்திப்பில் அமர்ந்து, சாலை மறியல் செய்து வாகனத்தை மறித்தனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்திய பின், வாகனம் புறப்பட்டது.
முதலில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்திற்கு தான், உதயநிதியை அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டிருந்தனர். அங்கு ஏராளமான தி.மு.க.,வினர் கூடியதால், அருகில் உள்ள செங்கிப்படி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், போலீஸ் வாகனத்திலிருந்து இறங்க மறுத்த உதயநிதி, தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் தான், புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு கூட்டிச் செல்லுங்கள் என்றார்.
பேச்சுவார்த்தைக்கு பின், போலீசார் கூறியதை ஏற்று, செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் மாலை, 6:30 மணி அளவில் சென்றார். அவரிடம், 6:45 மணி அளவில் விசாரணை துவங்கியது. எஸ்.பி.சுந்தரவதனம், டி.எஸ்.பி., அழகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பின், இரவு, 8:10 மணி அளவில் உதயநிதி விடுவிக்கப்பட்டார். அதாவது, கைதாகி, 10 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து திருச்சி வழியாக சென்னை புறப்பட்டார்.
