கட்சி தாவிய 'மாஜி'க்களிடம் சபாநாயகர் பிரபாகர் விசாரணை
கட்சி தாவிய 'மாஜி'க்களிடம் சபாநாயகர் பிரபாகர் விசாரணை
UPDATED : ஆக 05, 2026 06:02 AM
ADDED : ஆக 05, 2026 05:43 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,க்களிடம் நேற்று சபாநாயகர் பிரபாகர் விசாரணை நடத்தினார்.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற பெருந்துறை - ஜெயகுமார், மதுராந்தகம் - மரகதம் குமரவேல், தாராபுரம் - சத்யபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா ஆகியோர், சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.
பின், நான்கு பேரும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, த.வெ.க.,வில் இணைந்தனர். அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தரப்பில் சபாநாயகர் பிரபாகரிடம் முறையிடப்பட்டது.
இது தொடர்பாக, இரு தரப்பினரையும் ஆகஸ்ட் 4ம் தேதி, தலைமை செயலகத்தில் உள்ள தன் அறையில் ஆஜராகும்படி சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேரும் நேற்று ஆஜராகினர். பழனிசாமிக்கு பதிலாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய்சுந்தரம் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பினரிடமும் பல்வேறு விளக்கங்களை சபாநாயகர் கேட்டார். அவர்கள் தெரிவித்த விளக்கங்கள், வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்யப்பட்டன. மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறி, அவர்களை சபாநாயகர் அனுப்பி வைத்தார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், கூட்டத்தொடர் முடிந்த பின், மீண்டும் விசாரணை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதேபோல, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்த கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க, சபாநாயகரிடம் அ.தி.மு.க., வலியுறுத்தி உள்ளது.
