ஈரோடு கிழக்கு தொகுதியை எங்களிடமிருந்து தி.மு.க., பறிக்காது: செல்வப்பெருந்தகை
ஈரோடு கிழக்கு தொகுதியை எங்களிடமிருந்து தி.மு.க., பறிக்காது: செல்வப்பெருந்தகை
ADDED : ஜன 04, 2025 05:04 AM

சென்னை: ''ஈரோடு கிழக்கு தொகுதியை, எங்களிடம் இருந்து தி.மு.க., பறிக்காது; இயற்கையாகவே, அது காங்கிரஸ் தொகுதிதான்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
செல்வப்பெருந்தகை பேட்டி:
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சீரமைப்பு பணி நடக்கிறது. மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இணையதளம் வாயிலாக விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள், 15 தினங்களுக்குள் மனு அளிக்கலாம், அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு, காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்யப்படும்.
சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், வரும் 7ம் தேதி காலையில் மறைந்த காங்., தலைவர்கள் மன்மோகன் சிங், இளங்கோவன் படங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 8ம் தேதி 'கிராமம்தோறும் காங்கிரஸ்' என்ற தலைப்பில், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடக்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே பங்கேற்கின்றனர்.
கிராம, நகர, பேரூராட்சி, மாநகராட்சி கமிட்டிகளை, யாரெல்லாம் சிறப்பாக செய்து முடிக்கின்றனரோ, அவர்களுக்கு மாநில பதவி மற்றும் எம்.எல்.ஏ., 'சீட்'க்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் வரும் ஏப்., மாதத்திற்குள் முடிவடையும்.
பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது. தற்போது, இந்த வழக்கை, சிறப்பு குற்றப் புலனாய்வு குழு விசாரிக்கிறது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரன் மொபைல் போன் கிடைத்துள்ளது.
மொபைல் போனை ஆய்வு செய்தாலே, 'யார் அந்த சார்?' என, தெரிந்து விடும். எந்த சாராக இருந்தாலும், அவர் மாட்டிக் கொள்வார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் தொலைத்தெடார்பு ஆணையம் இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க., எங்களிடம் இருந்து பறிக்காது; இயற்கையாகவே அது காங்கிரஸ் தொகுதி தான். அந்த நம்பிக்கை எனக்கும் முழுமையாக இருக்கிறது. தொகுதியை காங்., பெற்று, அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.