'முதல்வர் வேட்பாளர் திருமாவளவன்' வி.சி., கட்சியில் ஒலிக்கும் புதிய முழக்கம்
'முதல்வர் வேட்பாளர் திருமாவளவன்' வி.சி., கட்சியில் ஒலிக்கும் புதிய முழக்கம்
ADDED : அக் 19, 2024 01:30 AM

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் வலியுறுத்த துவங்கி உள்ளது.
'ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு, கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கு அதிகாரம்' என்ற முழக்கத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார்.
ஐந்து கொள்கைகள்
ஆனால், தி.மு.க., கூட்டணியில் நீடிப்பதால், ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை, வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி எப்படி அணுகப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், வி.சி., துணை பொதுச்செயலர் வன்னியரசு அளித்த பேட்டி:
வி.சி., கட்சிக்கு இலக்கும், கனவும் இருக்கிறது. இலக்கு என்பது ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் தேசியம், வர்க்க பேத ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என, ஐந்து கொள்கைகளை சொல்ல முடியும்.
கட்சியின் கனவு என்பது திருமாவளவன், ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்; முதல்வராக வேண்டும். துணை முதல்வர் பதவி அல்ல. அப்பதவி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. அப்பதவி ஒரு மாண்புக்குரிய பதவி தான்.
முதல்வர் பதவி தான் அதிகாரமிக்க பதவி. எனவே, திருமாவளவன் முதல்வராகி விட்டால், இதற்கு முன் முதல்வராக இருந்தவர்களை விட சிறப்பாக பணியாற்றுவார்.
சிறந்த முதல்வர்
இனிமேல் வரப்போகும் முதல்வர்களும், திருமாவளவன் போல் சிறந்த முதல்வராக செயல்பட வேண்டும் என்பதற்கு, அவர் ஒரு முன்னுதாரணமாக இருப்பார்.
இதை பெருமைக்காக சொல்லவில்லை. அவ்வளவு கூர்மையாக, அறிவுப்பூர்வமாக தமிழகத்தை வழி நடத்தக்கூடியவர் அவர். எங்களின் முதல்வர் கனவு கண்டிப்பாக நிறைவேறப் போகிறது; அதற்கான இலக்கையும் நாங்கள் அடைவோம். அதை நோக்கி தான் நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம். தமிழக அரசியலில் வி.சி., கட்சி முக்கிய இடத்தை அடையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -