சி.பி.ஐ., அதிகாரிகள் கேள்வியால் விசாரணையில் பதறிய 'மாஜி'
சி.பி.ஐ., அதிகாரிகள் கேள்வியால் விசாரணையில் பதறிய 'மாஜி'
ADDED : மார் 18, 2026 05:56 AM

- நமது நிருபர் -
கடந்தாண்டு செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி, டில்லியில் ஜன.12, 19 மற்றும் மார்ச் 15ம் தேதிகளில் விஜயிடம் விசாரித்தனர்.
அப்போது விஜய் தரப்பில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது. 'எங்கள் கூட்டத்திற்கு இடம் ஒதுக்கியதில் துவங்கி எல்லாவற்றிலும் செந்தில் பாலாஜியின் தலையீடு இருந்தது' என விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் செந்தில்பாலாஜிக்கு 'சம்மன்' அனுப்பினர். அதன்படி டில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அப்போது 'விஜய் பங்கேற்ற கூட்டத்தை சீர்குலைக்க ஆயுதங்களுடன் ஆட்களை அனுப்புனீர்களா' என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதறியபடி செந்தில்பாலாஜி 'இது என் மீது விஜய் தரப்பினர் சுமத்திய அபாண்டமான குற்றச்சாட்டு. த.வெ.க.,வினர் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளில் துளி அளவும் உண்மை அல்ல. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பதாலும் முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய கரூர் தொகுதி எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் என் கடமையை தான் செய்தேன்' என, வாக்குமூலம் அளித்துள்ளார்.
தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் செந்தில்பாலாஜியிடம் தெரிவித்துள்ளனர்.

