அண்டா கிடைக்காத கோபத்தில் பறக்கும் படையிடம் 'போட்டு கொடுத்த' பெண்கள்
அண்டா கிடைக்காத கோபத்தில் பறக்கும் படையிடம் 'போட்டு கொடுத்த' பெண்கள்
UPDATED : மார் 18, 2026 04:24 PM
ADDED : மார் 18, 2026 05:59 AM

கோவை: எவர் சில்வர் அண்டா கிடைக்காத கோபத்தில், தி.மு.க.,வினர் பதுக்கி வைத்திருந்த கிடங்கை தேர்தல் பறக்கும் படைக்கு கோவை பொதுமக்கள் போட்டுக் கொடுத்தனர். அவ்விடத்துக்குச் சென்ற பறக்கும் படையினர், 98 எவர் சில்வர் அண்டாக்களை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் வாக்காளர்களை கவர, தி.மு.க.,வினர் வீட்டுக்கு ஒன்று வீதம் எவர் சில்வர் அண்டா வழங்குகின்றனர். முன்னதாக, தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுவார்கள் என உத்தேசமாக கணிக்கப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு மட்டும் டோக்கன் வழங்கியிருந்தனர்.
டோக்கன் கொடுத்தபோது பலரும் கண்டுகொள்ளவில்லை. அண்டா கொடுக்க ஆரம்பித்தபோது, கிடைக்காத பெண்கள், தி.மு.க.,வினரிடம் வாக்குவாதம் செய்தனர். டோக்கனில் நான்கு கட்டம் இருந்தது.
ஒரு கட்டத்தில் 'டிக்' செய்து விட்டு,' டோக்கனை பத்திரமாக வைத்திருங்கள்; இன்னும் மூன்று பரிசு வரலாம்' என, தி.மு.க.,வினர் கூறிச் சென்றனர்.
அண்டா கிடைக்காதவர்களை வெறுப்பேற்றும் விதமாக, ஒரே வீட்டுக்கு தி.மு.க.,வினர் கொடுத்த எவர் சில்வர் அண்டா, அ.தி.மு.க.,வினர் கொடுத்த ஹாட்பாக்ஸ், தட்டு உள்ளிட்ட பொருட்களை பரப்பி வைத்து, சிலர் வீடியோ எடுத்து, 'எங்களுக்கு இதெல்லாம் கிடைத்தது; உங்களுக்கு கிடைத்ததா' என்ற ரீதியில் 'ரீல்ஸ்' வெளியிட்டனர். இது, அண்டா கிடைக்காத பெண்களிடம் கோபத்தை அதிகரித்தது.
மாநகராட்சி, 84வது வார்டு, உக்கடம் புல்லுக்காடு மைதானத்தை சேர்ந்த பெண்கள், அனைத்து குடும்பத்துக்கும் அண்டா வழங்காததை சுட்டிக் காட்டியும், தி.மு.க., நிர்வாகியை கண்டித்தும் மறியலில் ஈடுபட்டனர்.
அப்பெண்கள் கூறுகையில், '500 குடும்பங்கள் வசிக்கின்றன. வீட்டுக்கு ஒன்று என்றார்கள். ஆனால், 150 டோக்கன் மட்டும் கொடுத்து, மற்றவற்றை பதுக்கினர். எந்த கட்சி பரிசு பொருள் கொடுத்தாலும் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். சிலருக்கு மட்டும் கொடுத்தால், ஓட்டுப்போட மாட்டோம்' என்றனர்.
இச்சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இனி பரிசு பொருள் வராது என நினைத்த பெண்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
இதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, தெற்கு உக்கடம் காந்தி நகர் பகுதியில், ஒரு அறையில், 98 அண்டாக்களை பறிமுதல் செய்து, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படங்களுடன் கூடிய பிளாஸ்டிக் கவரில் அண்டா இருந்ததால், உடனடியாக பாதுகாப்பு அறையில் வைத்து சீலிட்டனர்.

