சுங்கக்கட்டணம் செலுத்தக்கூட துப்பில்லாத மாஜி எம்.எல்.ஏ; வீண் தகராறால் 3 மணிநேரம் டிராபிக்
சுங்கக்கட்டணம் செலுத்தக்கூட துப்பில்லாத மாஜி எம்.எல்.ஏ; வீண் தகராறால் 3 மணிநேரம் டிராபிக்
ADDED : மார் 12, 2025 07:36 AM

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், -நத்தம் பரளிபுதுார் சுங்கச்சாவடியில், கட்டணம் செலுத்த மறுத்து, பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், தன் ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதால், மூன்று மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாக்குவாதம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி, பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், 50. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, காரில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி நத்தம் ரோட்டில் சென்றார். நத்தம் அருகே பரளிபுதுார் சுங்கச்சாவடியில், இவரது காருக்கு கட்டணம் செலுத்துமாறு கூறினர். அப்போது, தான் முன்னாள் எம்.எல்.ஏ., எனக்கூறி, கட்டணம் செலுத்த கதிரவன் மறுத்து உள்ளார்.
சுங்கச்சாவடி ஊழியர்கள், 'முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு எதுவும் கிடையாது. நீங்கள் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும்' என்றனர். இதனால், கதிரவனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கதிரவன், தன் ஆதரவாளர்களுடன் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நத்தம் போலீசார், அவரிடம் பேச்சு நடத்தினர். போலீசார் தலையிட்டு சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேசிய பின், அவர் போராட்டத்தை கைவிட்டு, கடைசி வரை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாமல், காரில் புறப்பட்டுச் சென்றார். இந்த களேபரத்தால், அங்கு மூன்று மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு கிடையாது. அதைத்தான் ஊழியர்கள் தெரிவித்தனர். அவர்கள் சட்டப்படி தான் நடந்தனர். ஆனால், விதிமீறி கட்டணம் செலுத்தாமல் தான் செல்வேன் என, கதிரவன் தான் களேபரம் செய்தார்.
'லுாட்டி'
பல லட்சம் ரூபாய் செலவழித்து கார் வாங்க தெரிந்தவருக்கு, முறையாக சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த தெரியாதா? அவர் பிரச்னையில் ஈடுபட்டதால், மற்ற வாகன ஓட்டிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.
சாதாரண மக்கள், 'பாஸ்டேக்'கில் கட்டணம் செலுத்தி செல்லும் நிலையில், இந்த அரசியல்வாதிகள் சுங்கச்சாவடிகளில் அடிக்கும், 'லுாட்டி'களுக்கு அளவே இல்லை. அவர்களை கண்டிக்க முடியாமல், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைப்பது இன்னும் கொடுமை.
இவ்வாறு வாகன ஓட்டிகள் புலம்பினர்.