UPDATED : டிச 12, 2024 04:13 AM
ADDED : டிச 11, 2024 07:20 PM

தி.மு.க., செயற்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அழைக்கப்பட்டு உள்ளனர். பொங்கலுக்கு பின் பொதுக்குழு நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னையில் வரும் 18ம் தேதி நடக்கும் செயற்குழு கூட்டத்தில், வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்தே முக்கியமாக பேசப்பட உள்ளது. அனைத்து தொகுதிகளையும் ஆளும் கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான வியூகம் வகுக்கப்பட உள்ளது.
அதனால், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி அமைப்பாளர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக, செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வழக்கமாக, செயற்குழுவுக்கு அதன் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் அழைக்கப்படுவதில்லை.
அதன் தொடர்ச்சியாக, பொங்கலுக்கு பின், மதுரையில் பொதுக்குழுவை கூட்ட, துணை முதல்வர் உதயநிதி தரப்பில், முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், திருச்சியில் நடத்தலாம் என, முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
எந்த ஊரில், எந்த தேதியில் பொதுக்குழுவை நடத்துவது என்பது குறித்து செயற்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

