மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்குரல்
மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்கள்: உதயநிதி ஆதரவாளர்கள் போர்க்குரல்
ADDED : ஜூன் 05, 2026 05:26 AM

- நமது நிருபர் -
'மூத்த நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்க வேண்டும்' என, தி.மு.க.,வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆதரவாளர்கள் குரல் எழுப்பியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிய, கள ஆய்வு குழு ஒன்றை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அமைத்துள்ளார். விசாரணையை முடித்து, அக்குழு வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க உள்ளது. சமீபத்தில், கோடை கால ஓய்வுக்காக, கர்நாடக மாநிலம், மைசூரு அருகே உள்ள குடகு மலை பகுதிக்கு, ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளிட்ட, 10 பேர், சென்றனர்.
அங்கு நடந்த ஆலோசனையின் போது, 'மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். துணை பொதுச்செயலர் பதவிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.
'உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை, பொதுச்செயலர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும். செயல் தலைவர் பதவியை உதயநிதிக்கு வழங்க வேண்டும்' என, ஸ்டாலினிடம் முன்னாள் அமைச்சர் மகேஷ் உள்ளிட்ட சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
'இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் என்ற வகையில் நியமிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிறுத்தப்பட்ட புதுமுகங்களும், இளைஞர்களும் தான் வெற்றி பெற்றனர்.
'எனவே, தி.மு.க., நிர்வாகத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பதவிகள் தரப்பட வேண்டும். மூத்த நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல் குழுவில் மட்டுமே இடம் தர வேண்டும்' என, உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் குறித்து, ஸ்டாலின், அப்போது எந்த முடிவும் சொல்லவில்லை. தற்போது, சென்னை திரும்பியுள்ள நிலையில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்டோருடன், இது தொடர்பாக ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
கள ஆய்வுக்குழு அறிக்கைக்கு பின், இது தொடர்பான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
