த.வெ.க., சின்னத்தை கண்டு அரசுக்கு 'அலர்ஜி'; 'ஸ்பீக்கர்' பயன்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவு
த.வெ.க., சின்னத்தை கண்டு அரசுக்கு 'அலர்ஜி'; 'ஸ்பீக்கர்' பயன்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவு
ADDED : பிப் 12, 2026 05:24 AM

த.வெ.க.,வுக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்கள் 'விசில்' பயன்படுத்த, நகராட்சி நிர்வாகத் துறை தடை விதித்துள்ளது.
தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பையை, அந்தந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள துாய்மை பணியாளர்கள் சேகரிக்கின்றனர். இதில், பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகளில், வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் பணியை துாய்மை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தவிர்க்க உத்தரவு
இதற்காக நிரந்தர அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை போன்ற மாநகராட்சிகளில், தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் குப்பை கையாளப்பட்டு வருகிறது.
இதில், வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை செய்யும் துாய்மை பணியாளர்கள், தாங்கள் வந்திருப்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விசில் பயன்படுத்துவர். அவர்களின் விசில் சத்தம் கேட்டு, பொது மக்களும் குப்பையை எடுத்து வந்து, குப்பை வண்டியில் கொட்டுவது வழக்கம்.
இந்நிலையில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட த.வெ.க.,வுக்கு, விசில் சின்னத்தை, இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், விசில் சின்னத்தில், த.வெ.க., தேர்தலை சந்திக்க இருக்கிறது. எனவே, விசில் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, துாய்மை பணியாளர்கள் இனி விசிலுக்கு பதிலாக, ஒலிபெருக்கியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், அரசு பஸ்களில் இனி நடத்துநர்கள் விசில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பாடல்
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கி பயன்படுத்துவது என, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, துாய்மை விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டு, தெருக்களில் வலம் வரும் குப்பை வண்டியில் ஒலிபரப்பப்பட்டது.
இதை, சில உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. சில இடங்களில் விசில் பயன்படுத்துகின்றனர். விசிலை விட, ஒலிபெருக்கி வாயிலாக மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்து, துாய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எனவே தான் விசிலை தவிர்த்து, ஒலிபெருக்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

