தமிழக அணியா; டில்லி அணியா... முடிவு செய்ய போகும் தேர்தல் இது: முதல்வர் ஸ்டாலின்
தமிழக அணியா; டில்லி அணியா... முடிவு செய்ய போகும் தேர்தல் இது: முதல்வர் ஸ்டாலின்
UPDATED : பிப் 13, 2026 10:00 AM
ADDED : பிப் 12, 2026 05:17 AM

சென்னை: சென்னை, விழுப்புரம் மண்டலங்களுக்கான தி.மு.க., ஓட்டுச்சாவடி குழுவினருக்கான பயிற்சி மாநாடு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திருவிடந்தையில் நேற்று நடந்தது.
அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவில் எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு தி.மு.க.,விடம் உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள பூத் கமிட்டிகளின் எண்ணிக்கை 75,000. ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 350 ஓட்டுகளை தான் இலக்கு வைத்துள்ளோம்.
இந்த இலக்கை நிறைவேற்றினால், 2 கோடியே 60 லட்சம் ஓட்டுகள் வாங்கி விடலாம். இந்த தேர்தலில் கட்டாயம் 2 கோடியே 50 லட்சம் ஓட்டுகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும் என கூறியிருந்தேன். இதை சாத்தியப்படுத்தி காட்ட வேண்டும்.
ஒவ்வொருவரும் 50 ஓட்டுகளுக்கு பொறுப்பு ஏற்றாலே வெற்றி உறுதி. ஏற்கனவே, 'ஓரணியில் தமிழகம்' வாயிலாக, ஒரு கோடியே 14 லட்சம் குடும்பத்தினர் நம்மோடு இணைந்து உள்ளனர். அவர்களின் ஓட்டுகள் ஒன்றுகூட விடுபட்டு விடாமல், தி.மு.க., கூட்டணிக்கு வர வேண்டும்.
எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும், எத்தனை புதிய ஊடகங்கள் வந்தாலும், திரைமறைவில் எத்தனை பேர் வேலை செய்தாலும், பிரசாரத் திறமை தான் முக்கியம். அதற்கு ஒவ்வொருவரும், 100 வாக்காளர்களை குறைந்தபட்சம் ஐந்து முறையாவது சந்தித்து, ஓட்டு கேட்க வேண்டும்.
தமிழக மக்கள் மத்தியில், ஆளுங்கட்சிக்கு ஆதரவு அலை தான் வீசுகிறது; எதிர்ப்பு அலை இல்லை. இதை வெற்றியாக அறுவடை செய்வது, உங்கள் கையில் தான் இருக்கிறது.
கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், நாம் வாங்கிய ஓட்டு சதவீத கணக்கின்படி, வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் நம்மால் வெற்றி பெற முடியும். அதற்கு, ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்.
வீடுவீடாகச் சென்று இயல்பாக, சகஜமாக, உரிமையோடு பேசி பிரசாரம் செய்யுங்கள். சாதனைகளை எடுத்து சொன்னால், அவர்கள் உணர்ந்து வரவேற்பர்.
ஆட்சிக்கு யார் வரக்கூடாது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும். தி.மு.க.,வை தவிர, வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும், அது பா.ஜ., ஆட்சியாகத் தான் இருக்கும்; வளர்ச்சி அரசியல் மாறி, கலவர அரசியல் தமிழகத்தில் நடக்கும்.
இரண்டு கூட்டணிகளுக்குள் நடக்கும் தேர்தல் அல்ல; வெல்லப் போவது தமிழக அணியா, டில்லி அணியா என்பதை முடிவு செய்யப் போகிற தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.

