பத்திரப்பதிவு அதிகாரிகளின் தவறுகளால் அரசுக்கு ரூ.160 கோடி இழப்பு; தணிக்கை அறிக்கையில் தகவல்
பத்திரப்பதிவு அதிகாரிகளின் தவறுகளால் அரசுக்கு ரூ.160 கோடி இழப்பு; தணிக்கை அறிக்கையில் தகவல்
ADDED : பிப் 21, 2026 07:23 AM

சென்னை: 'ஆவணங்களை குறைத்து மதிப்பிட்டது, தவறாக வகைப்படுத்தியது போன்ற காரணங்களால், பதிவுத்துறைக்கு, 2022 - 23ம் நிதியாண்டில், 160 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முத்திரை தீர்வை மற்றும் பத்திரப்பதிவு துறையின் செயல்பாடுகள் குறித்த, இந்திய தணிக்கை தலைவரின் அறிக்கை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில், 579 சார் பதிவாளர் அலுவலகங்கள், 54 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பதிவான பத்திரங்கள், அதற்கு வசூலிக்கப்பட்ட முத்திரை தீர்வை குறித்து, 49 குழுக்கள் ஆய்வு செய்தன.
துறையில், 2018 - 19 முதல், 2022 - 23 வரையிலான ஆண்டுகளில், 40,701 ஆவணங்கள் உட்தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், 35,718 ஆவணங்கள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டுள்ளன; 4,983 ஆவணங்கள் உட்தணிக்கை செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. பதிவுத்துறையில் தணிக்கை பதிவாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதே இதற்கு காரணம்.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 76 ஆவணங்கள் குறைத்து மதிப்பிடப்பட்டதால், 2.34 கோடி ரூபாய் வருவாய் வரவில்லை. இதே போல, 678 ஆவணங்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டதால், 120.57 கோடி ரூபாய் வசூல் குறைந்து உள்ளது.
கவனக்குறைவு
மாறுதல் தீர்வை மற்றும் தவறான ஒதுக்கீடு காரணமாக, 40 ஆவணங்களில், 3.17 கோடி ரூபாய்; மற்றவை என்ற தலைப்பில், 365 ஆவணங்களில், 34.04 கோடி ரூபாய் என, மொத்தம், 160.12 கோடி ரூபாய் வசூலாக வேண்டியது குறைந்துள்ளது. திருப்போரூர், காஞ்சிபுரம் நான்காவது சார் பதிவாளர் அலுவலகம் போன்றவற்றில், கூட்டுறவு சங்கம், உறுப்பினர்களிடையே நடந்த சொத்து பரிமாற்றத்தில், அதிகாரிகள் கவனக்குறைவால், முத்திரை தீர்வை வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், 2022ல் பதிவான ஆவணங்களை சரி பார்த்த போது, 'லீலா வென்சர்ஸ் ஓட்டல்' நிறுவனம் சார்பில், 393.15 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 252.36 கோடி ரூபாய் நிலம், 140.79 கோடி ரூபாய் மதிப்பு கட்டடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட சொத்தின் மொத்த பரிசீலனை மதிப்பு, 674.99 கோடி ரூபாய். இதில் அசையா சொத்து என, 393.14 கோடி ரூபாய்க்கு மட்டுமே, பத்திரப்பதிவில் முத்திரை தீர்வை செலுத்தப்பட்டு உள்ளது.
முத்திரை தீர்வை
அதில், 16 காற்றாலைகள் உட்பட, 282 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் கணக்கில் காட்டப்படவில்லை. இதில், 1.62 கோடி ரூபாய் குறைவாக முத்திரை தீர்வை வசூலானது தெரிய வந்துள்ளது. ஆனால், காற்றாலைகளை விற்கும் எண்ணம் இல்லை என்ற ஆவணதாரரின் கருத்தையும், காற்றாலைகள் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அதிகார எல்லையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் சார் பதிவாளருக்கு அதிகாரம் உண்டு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.சுங்குவார்சத்திரத்தில் தணிக்கை செய்யப்பட்ட, இரண்டு ஆவணங்களில், மதிப்பு குறைவாக கடைப்பிடிக்கப்பட்டதால், 1.34 கோடி ரூபாய் முத்திரை தீர்வை குறைவாக வசூலாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

