அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை
அர்ச்சகர்களின் தட்டு பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை
UPDATED : அக் 29, 2024 05:29 AM
ADDED : அக் 29, 2024 05:14 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலில், அர்ச்சகர்களின் தட்டு பணத்தைப் பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை அலுவலர்களின் செயலால் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு, 30-க்கும் மேற்பட்ட உப கோவில்கள் உள்ளன. இவற்றில், கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோவிலும் ஒன்று.
இக்கோவிலில் அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் இஷ்டப்பட்டு செலுத்தும் பணத்தை உண்டியலில் செலுத்த, அங்குள்ள ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்களிடம் அடாவடியாக நிர்ப்பந்திக்கின்றனர்.
அவ்வாறு செலுத்தாதவர்களிடம் கண்டிப்பு காட்டுகின்றனர். பக்தர்களின் வருகையை கண்காணித்து, உண்டியலில் அவர்கள் பணம் செலுத்த மூன்று ஊழியர்களை நியமித்து கெடுபிடி செய்வதோடு, 'சிசிடிவி' கேமராக்கள் அமைத்து அதிகாரிகள் கண்காணிக்கின்றனர்.
பக்தர்கள் விரும்பி தட்டில் பணம் கொடுக்கும் போது, அதை பெறும் அர்ச்சகர்கள் பலருக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு துன்புறுத்தப்படும் அவல நிலையும் தொடர்கிறது.
பக்தர்கள் பணத்தை உண்டியலில் இடவும், நன்கொடையாக பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் செலுத்தவும் அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
கோவிலில் அன்றாட பூஜை, அபிஷேகம் குறித்த அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லாமல் ஹிந்து அறநிலையத் துறை இது போன்று ஈடுபடுவது, பக்தர்களை கொதிப்படைய செய்கிறது.
மலேஷியா பக்தர் லீலாவதி கூறியதாவது:
பூம்பாறை வேலப்பர் கோவில் வழிபாட்டிற்கு வந்தபோது கோவில் உண்டியலில் பணம் செலுத்தினேன். தொடர்ந்து, விருப்பத்தின் அடிப்படையில் அர்ச்சகருக்கும் பணம் கொடுத்த நிலையில், வாங்க மறுத்து, பணத்தை உண்டியலில் செலுத்தி விட்டார். இது சம்பந்தமான எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.
ஹிந்து அறநிலையத் துறையின் இத்தகைய செயல்பாடு வருத்தமளிக்கிறது. கோவில் அர்ச்சகர்களுக்கு கிடைக்கும் இதுபோன்ற சிறு தொகையை அறநிலையத்துறை பறிப்பது நியாயம் இல்லை.
கோவில் வழிபாட்டில், அர்ச்சகரின் தட்டில் விபூதி உள்ளிட்டவை பெறும் போது சிறு காணிக்கை செலுத்த வேண்டும் என, என் முன்னோர் கூறி உள்ளனர். அதன் அடிப்படையில் தான் செலுத்தினேன்.
கொடைக்கானல் ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் மகேஷ்வரன் கூறியதாவது:
அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் வழங்கும் பணத்தை, உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள அர்ச்சகர்களுக்கு பக்தர்கள் இஷ்டப்பட்டு காணிக்கை அளிக்கும் நிலையில், அதை பறிப்பது நியாயம் இல்லை.
தமிழக அரசு பிற மத வழிபாட்டில் தலையிடுவதில்லை. கோவில்களில் இது போன்ற நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்நிலையால், பக்தர்கள் கோவில்களில் காணிக்கை செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு கூறினர்.