'சர்வே' எண் முழுதுக்குமான நில வரைபடம் கிடைப்பதில்லை
'சர்வே' எண் முழுதுக்குமான நில வரைபடம் கிடைப்பதில்லை
UPDATED : பிப் 01, 2025 03:40 AM
ADDED : ஜன 31, 2025 10:48 PM

சென்னை: உட்பிரிவுகள் தவிர்த்து, 'சர்வே' எண் முழுதுற்கும் உட்பட்ட நிலத்துக்கான வரைபடங்களை, 'ஆன்லைன்' முறையில் பெறும் வசதி நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நிலம் தொடர்பான பட்டா, நில அளவை வரைபடம் போன்றவை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இந்த ஆவணங்களை, பொதுமக்கள் ஆன்லைன் முறையில் பார்க்க, பிரதி எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வருவாய் துறையின், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் போன்ற விபரங்களை அளித்தால், பட்டா மற்றும் நில அளவை வரைபடம் கிடைக்கும்.
இதில், தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான நிலங்களுக்கு, ஆன்லைன் முறையில் பட்டா கிடைத்தாலும், நில அளவை வரைபடம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதில், நில அளவை வரைபடங்களை, மக்கள் ஆன்லைன் முறையில் பிரதி எடுப்பதை எளிதாக்கும் நடவடிக்கைகளை, வருவாய் துறை முடுக்கி விட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட இணையதளத்தில், சர்வே எண்ணை மட்டும் அளித்தால், நிலத்தின் ஒட்டுமொத்த நில அளவை வரைபடம் கிடைக்கும்.
இதில், சர்வே எண்ணுடன் உட்பிரிவு எண்ணை உள்ளீடு செய்தால், சம்பந்தப்பட்ட மனைக்கான நில அளவை வரைபடம் இணையதளத்தில் கிடைக்கும்.
இந்த இரண்டு வசதிகளும் மக்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த நிலத்துக்கான வரைபடங்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், வீடு, மனை வாங்குவோர், தங்களுக்கான நிலம் பிரதான சர்வே எண்ணுக்கு உட்பட்ட பகுதியில், எங்கு அமைந்துள்ளது என்பதையும், அக்கம் பக்கத்து மனைகள் குறித்த விபரங்களையும் அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.