மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி ரூ.5 மட்டுமே! 'கிணறு வெட்ட பூதம் கிளம்பியதால்' அதிகாரிகள் அதிர்ச்சி
மதுரை மாநகராட்சியில் வீட்டு வரி ரூ.5 மட்டுமே! 'கிணறு வெட்ட பூதம் கிளம்பியதால்' அதிகாரிகள் அதிர்ச்சி
ADDED : ஜன 05, 2026 05:24 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் வீடுகளுக்கு ரூ.5 மட்டுமே வரி நிர்ணயம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் வணிக கட்டடங்களுக்கு விதிமீறி குறைவாக வரி நிர்ணயம் செய்த புகாரால் மேயர், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் பதவிகளை இழந்தனர். மேயரின் கணவர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். அலுவலர்கள் சிலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். முறைகேடு குறித்து போலீஸ் விசாரணையும் நடக்கிறது. மேலும் பலர் இதில் சிக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய' கதையாக விரிவாக்க வார்டுகளில் (மண்டலம் 1) நடக்கும் பாதாளச் சாக்கடை இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாமில், விண்ணப்பங்களுடன் சமர்ப்பித்த பலரின் வீட்டு வரி ரசீதுகளில், வரியாக ரூ.5, ரூ.35, ரூ.38 (6 மாதங்களுக்கு) என இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மாநகராட்சி வருவாயை அதிகரிக்க வீட்டு வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. குப்பைக்கும் வரி உயர்த்தப்பட்டது. வரி உயர்வால் மக்கள் கஷ்டப்படுவதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் மிகக்குறைவாக வரி நிர்ணயம் செய்யப்பட்டது மாநகராட்சி வருவாய் பிரிவின் அலட்சியத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இத்தகவல் கமிஷனர் சித்ரா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கவுன்சிலர்கள் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் சீரான வரிவிதிப்பு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம். 2011ல் மாநகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டபோது முந்தைய உள்ளாட்சி அமைப்புக்கு கீழ் இருந்த பகுதிகளில் பெரும்பாலான வீடுகளுக்கு வரிவிதிப்பில் இதுவரை மாற்றம் செய்யவில்லை. மிக குறைவான பழைய வரியே வசூலிக்கப்படுகிறது. இது மாநகராட்சிக்கு வரி இழப்பை ஏற்படுத்துகிறது.
அதேநேரம் புதிதாக வீடு கட்டுவோரிடம் பல மடங்கு வரி விதித்து ரூ.பல ஆயிரம் 'கறக்கப்படுகிறது'. குறிப்பாக விரிவாக்கப்பட்ட 28 வார்டுகளில் இப்பிரச்னை நீடிக்கிறது. இதை சரிசெய்ய கவுன்சில் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் ஒரே தெருவில் குடியிருப்போர் ஏற்றத்தாழ்வான வரியை செலுத்துகின்றனர். இப்பிரச்னைக்கு மாநகராட்சி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

