'சுனிதா வில்லியம்சால் இவ்வளவு நாள் விண்வெளியில் தங்க முடிந்தது எப்படி?'
'சுனிதா வில்லியம்சால் இவ்வளவு நாள் விண்வெளியில் தங்க முடிந்தது எப்படி?'
ADDED : மார் 19, 2025 06:32 AM

கோவை : ''இந்திய விஞ்ஞானிகள் இன்னும் நான்கு ஆண்டுகளுக்குள், 'ககன்யான்' மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்லும் வாய்ப்புள்ளது,'' என, 'இஸ்ரோ' முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
கோவை வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விண்வெளி பயணம் என்பது இன்று சர்வ சாதாரணம். அங்கு ஈர்ப்பு விசை இல்லாததால் பூமியில் போன்று சாதாரணமாக நடக்கமுடியாது. பயிற்சி பெற்றவர்கள்தான் சென்று வருவர். அதையும் தாண்டி ஒவ்வொரு மாதமும், சர்வதேச விண்வெளி மையத்துக்கு எரிபொருள் உள்ளிட்ட பொருட்களுடன் கலன் செல்லும்; அதில், நான்கு பேர் செல்வர்.
சர்வதேச விண்வெளி மையத்திலும், ஏழு பேர் இருப்பார்கள். திரும்ப பூமிக்கு வரும்பொழுது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, சில நடைமுறைகளை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு ஏற்கனவே பலமுறை சென்று வந்தவர்தான்.
இதற்கு முன் அதிக நாட்கள் இருந்துள்ளார். அவர் பயணித்த கலன் பாதுகாப்பாக பூமி திரும்புமா என்ற சந்தேகம் இருந்ததால், அதில்அவர் வரவில்லை. அவர் ஏழு பேருக்கு 'கமாண்டர்' பொறுப்பில், விண்வெளி மையத்தில்இருந்துகொண்டு, தற்போது பூமி திரும்புகிறார்.
அவரது உடல், உள்ளம், மன வலிமையே அவர் இவ்வளவு மாதம் தங்க காரணம். அவர் விண்வெளி துறையில் மற்றவர்களுக்கு பாடமாக இருந்துள்ளார்.
இந்திய விஞ்ஞானிகள் இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், 'ககன்யான்' திட்டம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆளில்லா விண்கலம் செல்வது இன்னும் இரண்டு வருடங்களில் நடந்துவிடும். இவ்வாறு, அவர் கூறினார்.