ADDED : பிப் 09, 2026 05:01 AM

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர் பகுதி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:
பெயர் வெளியிட விரும்பாத முதியவரின் புகார்: என் வயது 69. மனைவியின் சிகிச்சைக்காக பணம் தேவைப்பட்டது. ஊட்டி, எப்பநாடு பகுதியில் எனக்குச் சொந்தமான ஒரே சொத்தான 14 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல். அவசரமாக பணம் தேவைப்பட்ட நிலையில், விற்க முயன்றபோது, இடத்தை உட்பிரிவு செய்யக் கூறினர்.
கடந்த மே மாதம், ஊட்டி, தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தும், 20 நாட்கள் நடவடிக்கை இல்லை. பின், எப்ப நாடு வி.ஏ.ஓ.,வை அணுகினேன். அவர் தன் பங்குக்கு 10 நாட்கள் அலைக்கழித்தார். பின் மண்டல துணை வட்டாட்சியரிடம் அனுப்பி வைத்தார்.
அவர் பங்குக்கு ஒரு வாரம் அலைக்கழித்தார். பின், வி.ஏ.ஓ., தொடர்பு கொண்டு 'தாசில்தார் ஒரு லட்சம் கேட்பதாக' தெரிவித்தார். மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால், வேறு வழியின்றி, பேச்சுவார்த்தைக்குப் பின் ரூ.70 ஆயிரமாக குறைத்து(!) நண்பர் வாயிலாக ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
பணம் கொடுத்த அதே நாள் மாலை, உட்பிரிவு ஆணை வழங்கப்பட்டது. அதன் பிறகே நிலத்தை விற்றேன். ஊட்டி மழை யிலும் காற்றிலும், என் வயது மூப்பில் நான் பட்ட துயரத்துக்கு அளவே இல்லை.
தொடரும்...
![]() |


