மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அமைச்சரின் மாஜி உதவியாளர்களுக்கு தொடர்பு?
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அமைச்சரின் மாஜி உதவியாளர்களுக்கு தொடர்பு?
ADDED : பிப் 09, 2026 04:50 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் நடந்த, 150 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டில், அமைச்சர் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர்கள், ஆதரவாளருக்கு தொடர்பு உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
கைதான உதவியாளர் பாலாஜியிடம் நடத்திய விசாரணையில், கட்டுமான நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் ஒப்புதல் பெற்று தருவதாக கூறி, பினாமி பெயரில் பிளாட்டுகள் வாங்கி குவித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மோசடி:
மதுரையில், பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் அளித்த புகாரில், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் பாலாஜி, அவரது மனைவியை, மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அமைச்சரிடம் நெருங்கிய வட்டத்தில் இருந்த பாலாஜி தலைமையிலான, 'நால்வர் குழு' அமைச்சரின் பெயரை கூறி, பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு, அசையா சொத்து உட்பட பல கோடி ரூபாயை சுருட்டியது தெரியவந்துள்ளது.
இந்த நால்வர் குழு, அமைச்சரிடம், 'பவர் சென்ட்ராக' இருந்த காலத்தில் தான், மாநகராட்சியில் வணிக நிறுவனங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்ததில், பல கோடி ரூபாய் வரை முறைகேடு அரங்கேறியுள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு இக்குழுவின் சிபாரிசு அடிப்படையிலேயே, மாநகராட்சி அலுவலர்கள் விதிமீறி குறைவாக வரி நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், மாநகராட்சி, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்தது.
ஆனால், சொத்துவரி முறைகேடு வழக்கை, மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைதுடன் முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. தற்போது பாலாஜி கைதுக்கு பின், அந்த வழக்கு மீண்டும் துாசி தட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இலக்கு:
இதற்கிடையே, பாலாஜி கைது குறித்து, 'நாங்கள் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். இப்போது தான் இதையே கண்டுபிடிக்கிறீங்க. அடுத்ததாக, அமைச்சரின் தற்போதைய உதவியாளரையும் வளையத்தில் கொண்டு வாங்க' என, தி.மு.க.,வினரின் சமூக வலைதள பதிவுகள், கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து, போலீசார் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் கூறியதாவது: பாலாஜி, முன்னாள் உதவியாளர் ஒருவர், சொத்துவரி முறைகேடு வழக்கில் தொடர்புள்ள கவுன்சிலரின் கணவர், இவ்வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் என, நான்கு பேரை தான் அமைச்சர் நம்பினார். ஆனால், இவர்களின் இலக்கு, பெரிய நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நடத்துவோர், கட்டுமான நிறுவனங்கள் தான்.
மதுரை மாநகராட்சியின் ஒப்புதலுக்கு வந்த கட்டுமான நிறுவனங்களுக்கு சலுகை அளிப்பதாக கூறி, கைமாறாக அவர்களிடம் பிளாட்டுகளை பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ளனர். இவர்களின் நட்பில் இருந்த அ.ம.மு.க., நிர்வாகி ஒருவர், அவரது மனைவி பெயரில் பல பிளாட்டுகள் பதிவு செய்ததும் தெரியவந்துள்ளது.
இதுதவிர, இவர்கள் கை நீட்டும் ஒப்பந்ததாரர்களுக்கே அமைச்சரின் துறை ரீதியான ஒப்பந்தங்கள், நியமனங்கள், டிரான்ஸ்பர்கள், மதுரை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைத்த, பல கோடி ரூபாயை துபாயில் முதலீடு செய்துள்ளதாக அறிந்து, இந்த நால்வ ரையும் அமைச்சர் வெளியேற்றி விட்டார். இவ்வாறு தெரிவித்தனர்.

