லோக்சபா தேர்தலில் தோற்றால் சீட்டு கிழியும்... முதல்வர் எச்சரிக்கையால் அமைச்சர்கள் 'கிலி'
லோக்சபா தேர்தலில் தோற்றால் சீட்டு கிழியும்... முதல்வர் எச்சரிக்கையால் அமைச்சர்கள் 'கிலி'
UPDATED : ஜன 26, 2024 04:09 AM
ADDED : ஜன 26, 2024 02:00 AM

'லோக்சபா தேர்தலில், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் வெற்றியை நழுவ விட்டால், அமைச்சர் பொறுப்பும் நழுவி விடும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம், 23ம் தேதி நடந்தது. கூட்டம் முடிந்த பின், முதல்வர் ஸ்டாலின், லோக்சபா தேர்தல் குறித்து, அமைச்சர்களுடன் சிறப்பு ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது அமைச்சர்களுக்கு, தேர்தல் பணி குறித்து ஆலோசனை வழங்கியதுடன், எச்சரிக்கையாகவும் பேசி உள்ளார்.
அவர் பேசியுள்ளதாவது: லோக்சபா தேர்தலுக்காக, கட்சி சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில், தொகுதிவாரியாக நிர்வாகிகள் கூட்டம் நடத்தச் சொல்லி உள்ளேன். உங்களால் தீர்க்க முடியாத பிரச்னை இருந்தால், அதை குழுவின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அதற்கு தீர்வு காண வேண்டும்.
மாவட்ட அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கான சாதக, பாதக அம்சங்கள் குறித்து, அந்த குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த தேர்தல் வெற்றி, நமக்கு மிக மிக முக்கியம். எனவே, புதுச்சேரி உள்ளிட்ட, 40 தொகுதிகளிலும், நம்முடைய கூட்டணி வென்றாக வேண்டும்.
நாம் பங்கு வகிக்கும் ஆட்சி, மத்தியில் அமைய வேண்டும். அமைச்சர்களாக இருக்கும் உங்களின் மாவட்டத்துக்கும், பொறுப்பு மாவட்டத்துக்கும், நீங்கள்தான் வெற்றிக்குப் பொறுப்பேற்க வேண்டும். உங்கள் தொகுதியில் வெற்றியை நழுவ விட்டால், அமைச்சர் பொறுப்பும் நழுவி விடும்; இதை மனதில் வைத்து செயல்படுங்கள். எந்த நேரமும் இதை மறக்கக் கூடாது.
இவ்வளவு சீரியஸாக நான் கூறுவதற்கு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியின் வெற்றியும் நமக்கு மிகவும் முக்கியம். 'இந்தத் தொகுதியை எக்காரணம் கொண்டும் கூட்டணிக்கு கொடுக்கக் கூடாது. வேட்பாளராக வேறு நபரை போடுங்கள்' என்றெல்லாம் என்னிடம் யாரும் வர வேண்டாம். அனைத்து தொகுதிகளிலுமே, நானே வேட்பாளராக களம் இறங்கி இருப்பதாக நினைத்து, தேர்தல் வேலை பாருங்கள். நம் அணியின் முழுமையான வெற்றி முக்கியம்.
நம்முடைய ஆட்சியின் சாதனைகளை முழுமையாக மக்களிடம் எடுத்துச் சென்று ஓட்டு கேட்க வேண்டும். தி.மு.க., ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களால் மக்கள் நிறைய பயன் பெற்றுள்ளனர். அந்த வகையில் அவர்கள், தி.மு.க.,வுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டு போட தயாராக உள்ளனர். அதனால் உங்களுக்கு தேர்தல் களம் கடுமையாக இராது. எனவே, நம் கட்சிக்காரர்களையும், கூட்டணிக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து, வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும்.
முதல்வரின் இந்த எச்சரிக்கைப் பேச்சை அடுத்து, அமைச்சர்கள் மத்தியில் 'கிலி' ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

