இறுதி கட்டத்தில் பா.ஜ. தேர்தல் வியூகம்: 450 தொகுதிகளில் போட்டியிட திட்டம்
இறுதி கட்டத்தில் பா.ஜ. தேர்தல் வியூகம்: 450 தொகுதிகளில் போட்டியிட திட்டம்
UPDATED : ஜன 19, 2024 04:47 PM
ADDED : ஜன 18, 2024 11:21 PM

லோக்சபா தேர்தலுக்கான இறுதி கட்ட வியூகங்களை வகுக்கும் பணியில், மத்தியில் ஆளும் பா.ஜ., தீவிரமாக உள்ளது. இந்த தேர்தலில், 450 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ள பா.ஜ., வலுவில்லாத தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளது.
கடந்த 2019ஐ போலவே, இந்தாண்டும், ஏப்., - மே மாதங்களில் லோக்சபாவுக்கு தேர்தல் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மை
இதற்காக, அனைத்துக் கட்சிகளும் தீவிர பணியாற்றி வருகின்றன. 2019 தேர்தலில், மொத்தமுள்ள, 543 தொகுதிகளில், மத்தியில் ஆளும் பா.ஜ., 436 இடங்களில் போட்டியிட்டது. இதில், 22.9 கோடி ஓட்டுகளுடன், 37.7 ஓட்டு சதவீதத்துடன், 303 இடங்களில் வென்றது;
அதே நேரத்தில், 133 தொகுதிகளில் தோல்விஅடைந்தது.கடந்த தேர்தலில், காங்கிரஸ், 421 இடங்களில் போட்டியிட்டு, 11.94 கோடி ஓட்டுகளை பெற்றது. இந்தத் தேர்தலில், 290 தொகுதிகளில் போட்டியிடவும், மீதமுள்ள இடங்களில், இண்டியா கூட்டணியில் உள்ள, 27 கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கவும் திட்டமிட்டு உள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் திறப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து தேர்தலை சந்திக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது. மேலும், முதன்முறை ஓட்டளிக்கும் எட்டு கோடி இளைஞர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவும் கிடைக்கும் என்றும் நம்புகிறது. இதனால், கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும் என பா.ஜ., கணித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு தயாராவதற்கு தேவையான இறுதி கட்ட வியூகங்களை வகுப்பதில் கட்சி தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கட்சி தலைவர் நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைப்பு பொதுச் செயலர் பி.எல். சந்தோஷ் ஆகியோர் சமீபத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.இந்த கூட்டத்தில், கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதுபோல, கட்சி பலவீனமாக உள்ள, 240 தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, 543 லோக்சபா தொகுதிகளும், 146 குழுக்களாக பிரித்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அவற்றுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, வலுவில்லாத தொகுதிகள் உட்பட, 3 - 4 தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில், வெற்றியை உறுதி செய்வது தொடர்பாக, இந்தக் குழுக்களின் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த தேர்தலில் பீஹாரில் உள்ள, 40 தொகுதிகளில், 17ல் மட்டுமே பா.ஜ., போட்டியிட்டது. அதுபோல, மஹாராஷ்டிராவில், 48 தொகுதிகளில், 25ல் போட்டியிட்டது. தமிழகத்தில், 39ல் ஐந்தில் போட்டியிட்டது.
கூட்டணி இல்லை
இந்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டன. அதுபோலவே, பஞ்சாபில், 13ல் மூன்றில் மட்டுமே பா.ஜ., போட்டியிட்டது. தற்போது, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, அ.தி.மு.க., அகாலி தளம் ஆகியவற்றுடன் கூட்டணி இல்லை. இதனால், இந்த மாநிலங்களில் அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. இதன்படி, வரும் தேர்தலில், 450 தொகுதிகளில் களமிறங்க பா.ஜ., திட்டமிடப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

