சரணாலயங்களுக்கு பறவைகள் வருவது அதிகரிப்பு: 'பெஞ்சல்' புயலால் சூழலியலில் மாற்றம்
சரணாலயங்களுக்கு பறவைகள் வருவது அதிகரிப்பு: 'பெஞ்சல்' புயலால் சூழலியலில் மாற்றம்
UPDATED : டிச 09, 2024 05:42 AM
ADDED : டிச 09, 2024 03:47 AM

வங்கக்கடலில், நவ., 29ல் உருவான 'பெஞ்சல்' புயல், நவ., 30 புதுச்சேரி அருகில் கரையை கடந்தது. இந்த புயல், சென்னையை நெருங்கவில்லை என்றாலும், கன மழை மற்றும் சூறாவளி காரணமாக, சூழலியலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, பறவைகளின் வாழ்விட மாற்றம் குறித்து, பறவை ஆர்வலர்கள், வனத்துறையுடன் இணைந்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், பல்வேறு பறவைகள் சரணாலயங்களில், ஆய்வு நடத்தினர்.
இதுகுறித்த விபரம்:
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில், கடலில் இருந்து உட்புகும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், இங்கு ஆந்திர எல்லையை ஒட்டிய பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட பூநாரைகள் முகாமிட்டுள்ளன. அதே நேரம், பழவேற்காடு ஏரியின் தெற்கு பகுதியில், நீர் மட்டம் உயர்ந்தாலும், பூநாரைகள் காணப்படவில்லை.
பள்ளிக்கரணை
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், புயலின்போது கனமழை காரணமாக, நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. இருப்பினும், ஒக்கியம் மடுவு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பறவைகள் வருகையில், எவ்வித தாக்கமும் காணப்படவில்லை. இங்கு, 120 நீலச்சிறகி, 65 தட்டை வாயன், 415 ஊசிவால் வாத்து, 65 கிளுவை, 35 நாமத்தலை வாத்து, 800 கூழைகடா பறவைகள் முகாமிட்டுள்ளன.
முட்டுக்காடு
பெஞ்சல் புயல் காரணமாக, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால், அதிக அளவிலான கடல்நீர், முகத்துவார பகுதியில் வந்துள்ளது. இதை ஒட்டிய பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. எனினும், புயலுக்கு முன்பிருந்த பறவைகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை.
தற்போதைய நிலவரப்படி, இங்கு, 500 பூநாரை, 45 கோணமூக்கு உள்ளான், 30 கடற்காக்கை, 55 காஸ்பியன் ஆலா, 2,000 நாமத்தலை வாத்து ஆகியவை முகாமிட்டுள்ளன. கடற்பகுதியில் அரிதாக காணப்படும், ஒரு வெள்ளை வயிற்று கடற்கழுகு இங்கு வந்துள்ளது. இதேபோன்று அரிதாக வரும், சிறிய பூநாரைகளில், இரண்டு பறவைகள் இப்பகுதியில் முகாமிட்டுள்ளன.
வேடந்தாங்கல்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, இங்கு, 5,300 நத்தை குத்தி நாரை, 785 கூழைக்கடா, 3,800 மிளிர் உடல் அரிவாள் மூக்கன், எட்டு கரண்டிவாயன், 280 சிறிய நீர் காகம் ஆகியவை முகாமிட்டுள்ளன.
இதுகுறித்து, வனத்துறையுடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்ட, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: புயலுக்கு பின், பறவைகள் சரணாலயங்களில், பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். தற்போது கடுமையான சூறாவளி காற்று, கனமழைக்கு பிறகும், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பெரும் மாற்றம் ஏற்படவில்லை.
பள்ளிக்கரணை, முட்டுக்காடு, கேளம்பாக்கம் பகுதிகளில் பறவைகளின் எண்ணிக்கை உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. கனமழை காலத்தில், உபரி நீர் அகற்றும் பணி முறையாக நடந்தது, இதற்கு சாதகமாக அமைந்தது. தொடர் கண்காணிப்பில் இருக்கும் பகுதிகளுக்கு மாறாக, மிக அரிதாக காணக்கூடிய கருங்கால் காணான் கோழி வந்தது திருவொற்றியூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கொண்டித்தோப்பில், பேலியன் காணாங்கோழி, ஒரு வீட்டின் மீது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -