ரவுடிகள் மோதல், கொலையை தடுக்க தவறும் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., இனி 'சஸ்பெண்ட்'
ரவுடிகள் மோதல், கொலையை தடுக்க தவறும் இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., இனி 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 20, 2025 05:18 AM

சென்னை : 'ரவுடிகள் மோதல், கொலைகளை தடுக்க தவறும், இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, ஐ.ஜி.,க்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், 26,432 ரவுடிகள் உள்ளனர். இவர்களை கண்காணிக்க, எல்லா காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் உள்ளன. அதேபோல, ரவுடிகள் கண்காணிப்பு பிரிவும் தனியாக செயல்படுகிறது. வடக்கு, தெற்கு, மத்தி மற்றும் மேற்கு என, மண்டல வாரியாக, டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலும், ரவுடிகள் கண்காணிப்பு குழு செயல்படுகிறது.
இந்நிலையில், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி.,மற்றும் டி.ஐ.ஜி.,க்களுடன்; இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.,க்களுடன் தனித்தனியாக ஆய்வு கூட்டங்களை, மணடல ஐ.ஜி.,க்கள் நடத்தி உள்ளனர்.
கூட்டத்தில், அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:
ரவுடிகள் கண்காணிப்புக்கு, பருந்து செயலி பயன்படுத்தப்படுகிறது. இதில், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கூட்டுக்கொள்ளை, ஆதாயக் கொலையில் ஈடுபட்ட ரவுடிகளின் விபரங்கள் அடங்கி உள்ளன.
தினமும், காவல் நிலைய எல்லைகளில் வசிக்கும் ரவுடிகளின் வீடு தேடிச் சென்று, அவர்கள் பற்றி விசாரித்து, செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ரவுடிகளின் பகைமை குழுக்கள், பழிக்கு பழி வாங்க துடிக்கும் ரவுடிகள், அவர்களின் கூட்டாளிகள் குறித்தும் நுண்ணறிவு போலீசார், ரவுடிகள் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தினமும் விபரங்களை சேகரிக்கின்றனர். அதன்படி கண்காணிப்பு நடக்கிறதா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.
ரவுடிகள் மோதல் மற்றும் அவர்களால் ஏற்படும் கொலைகளை தடுக்க தவறும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்.
உள்ளூர் போலீசார் மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில் குளறுபடிகள் இருப்பதும் தெரியவருகிறது. இதை உடனடியாக சரி செய்து, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.