மதம் மாற வலியுறுத்தி பேசுவதா? தி.க., நிர்வாகி மீது போலீசில் புகார்
மதம் மாற வலியுறுத்தி பேசுவதா? தி.க., நிர்வாகி மீது போலீசில் புகார்
ADDED : ஆக 06, 2025 04:27 AM

தஞ்சாவூர்,: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பழைய மீன் மார்க்கெட் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, குடந்தை கத்தோலிக்க துறவியர் பேரவை சார்பில், சத்தீஸ்கர் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், கும்பகோணம் மாநகர தி.க., செயலர் ரமேஷ் பேசுகையில், “ஹிந்து மதத்தில் பல்வேறு ஜாதி பிரிவுகள் உள்ளன. இதனால், மதத்துக்குள்ளேயே ஏற்ற தாழ்வுகள் உள்ளன. அப்படி இருப்பதைக் காட்டிலும், மதம் மாறி ஒரு கிறிஸ்துவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருக்கலாம்.
''பச்சையாக சொல்லப் போனால், ஹிந்து மதத்தில் வேசி மகனாக இருப்பதை விட, சுயமரியாதை உள்ள மனிதனாக, வேறு மதத்தில் இருக்கலாம்,” என பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, ஹிந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் குருமூர்த்தி தலைமையில், ஹிந்து அமைப்பினர், கண்டன முழக்கங்களை எழுப்பியபடி, தஞ்சாவூர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று காலை சென்று புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, குருமூர்த்தி கூறுகையில், “ஹிந்து மதத்தையும், ஹிந்துக்களையும் இழிவுபடுத்துவது மட்டுமின்றி, கட்டாய மதமாற்றத்தை துாண்டும் வகையிலும், சமூக மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசிய ரமேஷை கைது செய்ய வேண்டும். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.