'அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் டாஸ்மாக் கடைகளில் இருந்தால் தவறா?'
'அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் டாஸ்மாக் கடைகளில் இருந்தால் தவறா?'
ADDED : மார் 21, 2025 01:21 AM

கோவை,: 'தமிழக அரசு அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் படம் வைக்கப்பட்டுள்ளதை போல, அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் படங்களை வைப்பதால் அரசுக்கும், முதல்வருக்கும் பெருமையே கிடைக்கும்; பா.ஜ.,வினரை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்' என்று பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ரெய்டு நடத்தினர்.
இதில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக, அமலாக்கத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஊழலை கண்டித்து போராட்டத்திற்கு புறப்பட்ட பா.ஜ., தலைவர்களை, தமிழக போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும், முதல்வர் ஸ்டாலின் போட்டோக்களை டாஸ்மாக் கடைகளில் பா.ஜ.,வினர் வைக்கின்றனர்.
தன் போட்டோவை, பா.ஜ.,வினர் தங்களுடைய சொந்த செலவில் வைக்கின்றனர். அதை பெருமையாக நினைக்காமல், போலீசாரை வைத்து கைது செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் போட்டோ வைப்பதால் அரசுக்கும், முதல்வருக்கும் பெருமை தான்.
இதை புரிந்து கொள்ளாத முதல்வர் போட்டோக்களை வைக்கும் பா.ஜ.,வினரை, அதுவும் பெண்களை போலீசார் கைது செய்து, இரவு வரை வைத்திருக்கின்றனர். இதை, இனியாவது முதல்வர் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.