தேர்வுக்கு 2 மணி நேரத்துக்கு முன் 'நீட்' வினாத்தாள் தயாரிக்க முடிவு
தேர்வுக்கு 2 மணி நேரத்துக்கு முன் 'நீட்' வினாத்தாள் தயாரிக்க முடிவு
ADDED : ஜூலை 02, 2024 10:51 PM

புதுடில்லி : தேர்வுக்கு சில மணி நேரம் முன் ரத்து செய்யப்பட்ட, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு இம்மாதம் நடக்கவுள்ளதாகவும், தேர்வுக்கு இரண்டு மணி நேரம் முன் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பணி நீக்கம்
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ல் நடந்தது. முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகின. தேர்வுக்கு முன் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
அதே போல, கல்லுாரி உதவி பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான யு.ஜி.சி., நெட் தேர்வு சமீபத்தில் நடப்பதாக இருந்தது. தேர்வுக்கு இரண்டு நாள் முன் வினாத்தாள் வெளியானதை அடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இந்த இரு விவகாரங்களால், தேர்வுகளை நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதன் தலைவர் எஸ்.கே.சிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
முதுநிலை படிப்பு
இந்த சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூன் 23ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. தேர்வுக்கு சில மணி நேரம் முன், தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வுக்கான செயல்முறைகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய பின், தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தேர்வர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு இம்மாதம் நடக்கும் என, அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளை, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று சந்தித்து பேசிய பின், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வுக்கு இரண்டு மணி நேரம் முன் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரத்து செய்யப்பட்ட நெட் தேர்வு கள், இம்மாதம் 25 முதல் 27 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.