பாடம் பாதித்தால் பரவாயில்லை சாராயம் விற்பனை குறையக் கூடாதோ?
பாடம் பாதித்தால் பரவாயில்லை சாராயம் விற்பனை குறையக் கூடாதோ?
ADDED : பிப் 15, 2026 02:12 AM

சென்னை: 'டாஸ்மாக்' தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு, வரும், 17ம் தேதி முதல் மது கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அன்று, மது விற்பனை பாதிக்கக் கூடாது என்பதற்காக, மதுக் கடைகளின் ஒரு சாவியை, பணியாளர்களிடம் இருந்து வாங்கி வைக்கும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு பாடம் பாதித்தாலும் பரவாயில்லை என, ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாத அரசு, 'சாராயம் விற்பனை ஒரு நாள் கூட பாதித்து விடக் கூடாது' என, கவனமாக செயல்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 மதுக் கடைகளை நடத்துகிறது. இந்த கடைகளில், 20,000க்கும் அதிகமான பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், இம்மாதம், 1ம் தேதி முதல், டாஸ்மாக் ஊழியர்கள், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த, 9ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, மதுக் கடைகளை திறக்காமல், இரண்டு மணி நேரம் வரை, கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபரம் தெரியாமல், மதுப் பிரியர்கள் கடையில் குவிந்தனர். பின், மாற்றுப் பணியாளர்களை வைத்து, அதிகாரிகள் கடைகளை திறந்தனர்.
இந்நிலையில் வரும், 17ம் தேதி முதல், மதுக் கடைகளை மூடி, போராட்டம் நடத்தப் போவாதாக, கூட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர். அன்று, மது விற்பனை பாதிக்கப்படாமல் இருக்க, மதுக் கடைகளின் ஒரு சாவியை, பணியாளர்களிடம் இருந்து வாங்கி வைக்கும்படி, மாவட்ட மேலாளர்களுக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது குறித்து, டாஸ்மாக் போராட்ட குழுவினர் கூறியதாவது: வரும், 16ம் தேதி வரை கடைகளை, தற்போது பணியில் உள்ளவர்கள்தான் நடத்த போகின்றனர். அன்றிரவு, கடைகளில் உள்ள மதுபானங்கள் இருப்பு, விற்பனை பணம் ஆகியவற்றை சரி பார்த்து சாவி வாங்குவது, சரியான நடைமுறையாக இருக்கும். ஆனால், தற்போது ஒரு சாவியை தரும்படி கூறுகின்றனர். ஒரு சாவி உள்ள கடைகளில், மாற்று சாவி செய்து தருமாறு கூறுகின்றனர்.
அந்த சாவியை செய்பவரே, கூடுதலாக ஒரு சாவியை செய்து, கடையை திறந்தால் யார் பொறுப்பு. கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்கள் இல்லாத சமயத்தில், கடைகளை திறக்கும் போது, தாசில்தார் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள், சாட்சி ஒருவரை வைத்து கடைகளை திறக்க வேண்டும். ஆனால், மதுக்கூட பணியாளர்கள் என, கடைக்கு சம்பந்தம் இல்லாத நபர்களை வைத்து, கடைகளை திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இது, சட்ட விரோதம். பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, பள்ளிகளில் பாடங்கள் பாதிக்கப்பட்டன. அந்த சமயத்தில், மாற்று ஆசிரியர்களை வைத்து, பாடம் நடத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தற்போது கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடம் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை என, அமைதியாக இருக்கும் அரசு, சாராயம் விற்பனை பாதிக்கக் கூடாது என்று, மாற்று ஆள் வைத்து கடையை திறக்க, நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

